உள்ளூர் செய்திகள்
பச்சைவாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கன்னியகோயில் பச்சைவாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
பாகூர் அருகே கன்னியகோவில் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மன்னாதீஸ்வரர்-பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது.
பிரசித்தி பெற்ற இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தீமிதி விழா விமர்சையாக நடைபெறும்.
மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுவை மற்றும் தமிழக பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.
இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு உற்சவர் மற்றும் பரிவார மூர்த்திகளின் கோபுரங்கள் புதிதாக கட்டப்பட்டது.
திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா 5 மணியளவில் மங்கள பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் முதல்கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து (வெள்ளிக்கிழமை) கோ பூஜையுடன் 2-ம் கால பூஜைகள் நடைபெற்றது. பின்னர் 9.45 மணி அளவில் கடம் புறப்பட்டு 10 மணி அளவில் உற்சவமூர்த்தி, வடக்கு ராஜ கோபுர மற்றும் பரிகாரம் மூர்த்திகளின் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
இந்த விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை மன்னாதீஸ்வரர் கோவில் அறங்காவல் குழு தலைவர் தனசேகரன், செயலாளர் கலியபெருமாள், பொருளாளர் செந்தில்குமார், துணை தலைவர் ஜீவகணேஷ், உறுப்பினர் கனகராஜ் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.