வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் - பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ராமேசுவரம்:
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை மண்டலம் நேற்று உருவாகியது.
இதன் எதிரொலியாக பாக் ஜலசந்தி-மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசத் தொடங்கியது. இதன் தாக்கமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய கடலோரப் பகுதியில் பலத்த சூறாவளிக் காற்று வீசத் தொடங்கி அலைகள் அடித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன், ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறை நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதனையடுத்து மீனவர்கள் தங்கள் படகுகளை கடலில் நங்கூர மிட்டு பாதுகாப்பாக நிறுத்தவும் அறிவுறுத்தியுள்ளனர். கடலோரப் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் கடலோரப் பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் மீன்துறை அதிகாரிகள் அறிவித்து பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை 1-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.