செய்திகள்
தக்கலை அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் விஷ வண்டுகள்
தக்கலை அருகே பனை மரத்தில் இருக்கும் விஷ வண்டுகள் பொதுமக்களை அச்சுறுத்துவதால் இதை அழிக்க கோரி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தக்கலை:
தக்கலை அருகே முளகு மூடில் இருந்து பூவன்கோடு செல்லும் சாலையில் நல்ல பிள்ளை பெற்றான் குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகே சாலையோரத்தில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. இந்த பாதை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் வாகனங்களிலும், நடந்தும் செல்வது வழக்கம்.
இங்குள்ள ஒரு பனை மரத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடந்தை என்ற விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தது. இந்த வண்டுகள் கடித்தால் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அது பற்றி தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் விஷ வண்டுகளை அழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது அந்த விஷ வண்டுகளின் கூடு பெரியதாகி உள்ளது. மேலும் விஷ வண்டுகளும் அந்த பகுதியில் பறக்க தொடங்கி உள்ளது.
தக்கலை தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனே நடவடிக்கை எடுத்து இந்த விஷ வண்டுகளை அழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வற்புறுத்தி உள்ளனர்.