செய்திகள்
கைது

விராலிமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

Published On 2021-10-11 10:09 GMT   |   Update On 2021-10-11 10:09 GMT
விராலிமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை:

விராலிமலை தாலுகா வடக்கு ஆண்டியப்பட்டியை சேர்ந்தவர் கணபதி (வயது 57). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு கணபதி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் அருகே உள்ள அவர்களுக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் இருந்துள்ளனர். இவரது மகன் ராஜேந்திரன் (22) வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் நடந்து வந்த ராஜாளிப்பட்டி காலனியை சேர்ந்த முத்துசாமி மகன் கவியரசனை (20) அழைத்து விசாரித்தனர். அதற்கு அவர் நாடகம் பார்க்க மணப்பாறையில் உள்ள குமாரப்பட்டிக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இதனையடுத்து ராஜேந்திரன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த தங்க நகை, ஒரு ஜோடி கொலுசு மற்றும் செல்போன் ஆகியவை திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து ராஜேந்திரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கவியரசனை துரத்திப்பிடித்து விராலிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு வந்த விராலிமலை போலீசார் கவியரசனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும் இதற்கு துணையாக இருந்த அவரது நண்பர்களான ராஜாளிபட்ட காலனி, மணப்பாறையை சேர்ந்த 16 வயது சிறுவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News