உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

போடிப்பட்டி நாற்றுப்பண்ணை விரிவாக்கம் முதல் கட்ட பணிகள் தொடக்கம்

Published On 2022-05-07 10:33 GMT   |   Update On 2022-05-07 10:33 GMT
நாற்றுப்பண்ணையில் 50ஆயிரம் நாற்றுக்களை வளர்க்கும் வகையில் நாற்றுப்பண்ணையை விரிவு படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பூர்:

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட போடிபட்டி ஊராட்சியில், ஊராட்சி அலுவலகத்தின் அருகில் நாற்றுப் (நாற்றங்கால்)பண்ணை செயல்பட்டு வருகிறது.

இந்த பண்ணை வளாகத்தில் வேம்பு, புளி, கொய்யா, எலுமிச்சை, முருங்கை, அரசு, பூவரசு உள்ளிட்ட பல்வேறு விதைகள் விதைக்கப்பட்டு வருகின்றன. இவை துளிர்விட்டு வளர்ந்ததும் அவை மண் நிரப்பப்பட்ட கெட்டியான கருப்புநிற பாலித்தீன் பைகளில் வைத்து வளர்க்கப்படுகின்றன.

இவ்வாறு வளர்க்கப்படும் நாற்றுக்கள் உடுமலை ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் இந்த ஒன்றியத்தில் உள்ள38 ஊராட்சிகளுக்கும், அந்தந்த ஊராட்சிகளின் தேவைக்கு ஏற்ப வழங்கப்படுகின்றன. அவை ஊராட்சி பகுதிகளில் உள்ள சாலையோரப்பகுதிகள், குளம், குட்டை, ஓடை ஆகியவற்றின் கரைப்பகுதிஉள்ளிட்ட இடங்களில் நடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. 

இந்த பணிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளர்கள் மூலம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது போடிபட்டி ஊராட்சி அலுவலகத்திற்கு அருகில் உள்ள நாற்றுப்பண்ணையில் 15 ஆயிரம் நாற்றுக்கள் உள்ளன. இவை ஊராட்சி பகுதிகளுக்கு அனுப்புவதைத்தொடர்ந்து நாற்றுக்கள் அடுத்தடுத்து தொடர்ந்து வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்த நாற்றுப்பண்ணையில் 50 ஆயிரம் நாற்றுக்களை வளர்க்கும் வகையில் நாற்றுப்பண்ணையை விரிவு படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக போடிபட்டி ஊராட்சி பகுதியில் மடத்துக்குளம் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு எதிரே உள்ள காலி இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு முதல்கட்டமாக அந்த இடத்தை சுத்தம் செய்து சுற்றிலும் வேலி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
Tags:    

Similar News