செய்திகள்
சல்வார்பட்டியில் பூத்து குலுங்கும் நித்திய கல்யாணி செடி.

ஊரடங்கினால் நித்திய கல்யாணி விலை குறைவு- விவசாயிகள் கவலை

Published On 2021-07-16 10:10 GMT   |   Update On 2021-07-16 10:10 GMT
வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நித்திய கல்யாணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தாயில்பட்டி:

வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சல்வார்பட்டி, ஏழாயிரம்பண்ணை, சுப்ரமணியபுரம், அன்பின் நகரம், பாறைப்பட்டி, பூசாரி நாயக்கன்பட்டி, சிப்பிபாறை, சத்திரம், குகன்பாறை, துலுக்கன்குறிச்சி, செவல்பட்டி, அம்மையார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 4,500 ஏக்கர் பரப்பில் மானாவாரி பயிராகவும், 500 ஏக்கர் பரப்பில் நீர் பாசன முறையிலும் நித்தியகல்யாணியை இப்பகுதி விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

எந்த விதமான தட்பவெப்ப நிலைகளிலும் வாடாமல் வளர்ந்து பூத்துக்குலுங்கும் தன்மையில் உள்ளதால் இதற்கு நித்தியகல்யாணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. எல்லா தட்பவெப்பநிலையிலும் வளருவதால் இதனை விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்கின்றனர்.

நித்தியகல்யாணியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்து தயாரிக்க இந்த செடியை பயன்படுத்துகின்றனர்.

இந்த செடி நடப்பட்டு 3 மாதத்தில் பலன் தரக்கூடியது ஆகும். இந்த செடியின் இலை, பூ, தண்டு முதல் வேர் வரை அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. பராமரிப்பு செலவும் மிக குறைவானதாகும்.

இதுகுறித்து விவசாயி செந்தாமரை கூறியதாவது:-

வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நித்திய கல்யாணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இங்கு சாகுபடி செய்யப்படும் செடிகள் இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொரோனாவுக்கு முன்பு வரை கிலோ ரூ.70-க்கு விற்பனை ஆனது. ஆனால் தற்போது ெகாரோனா காரணமாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் நித்திய கல்யாணி செடிகள் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைந்துள்ளதாலும், ஏற்றுமதி இல்லாததாலும் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம்.


Tags:    

Similar News