பெண்கள் மருத்துவம்
கர்ப்ப கால ரத்த அழுத்தம்

கர்ப்ப கால ரத்த அழுத்தம் சிறுநீரக பிரச்சினையை ஏற்படுத்துமா?

Published On 2022-04-01 08:24 GMT   |   Update On 2022-04-01 08:24 GMT
கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினைகள் உருவாவதற்கு ஐந்து காரணங்கள் உண்டு. ரத்த அழுத்தம் சிறுநீர் தொற்று, வயிற்றில் வளரும் கருவின் நிலை ஆகியவற்றை சோதித்து பார்த்து கொள்ள வேண்டும்.
பெண்கள் கருத்தரித்தது முதல் குழந்தையை வயிற்றில் சுமக்கும் காலத்தை 3, 6, 9 என்று மூன்று நிலைகளாக பிரிக்கிறோம். இதில் 6-வது மாதத்தில் இருந்து 9-வது மாதம் வரை கால்களில் வீக்கம் ஏற்படலாம்.

இது சாதாரண வீக்கமாக இருந்தால் பிரசவத்திற்கு பிறகு போய்விடும். அதேநேரம் சிறுநீரகத்தில் இருந்து புரதம் கழிதல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருக்கும் நிலையில் இந்த மாதிரி வீக்கம் ஏற்பட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். தலைவலி, வலிப்பு, நுரையீரல், கல்லீரல், இதயம் ஆகிய உறுப்புகளை கூட பாதிக்க வைக்கும். இதை டாக்சிமீயா என்போம்.

இந்த மாதிரி பிரச்சினைகள் மிக குறைந்த வயதான பெண்கள் கருவுற்றால் அவர்களுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். அதேபோல் காலம் தாழ்த்தி திருமணங்கள் செய்து கொள்ளும் பெண்களுக்கும் வரும். முக்கியமாக தலைபிரசவத்தில் மட்டும்தான் இந்த பிரச்சினைகள் உருவாகும். தொடர்ந்து வரும் கர்ப்பங்களில் இந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு.

கர்ப்ப காலத்தில் நுண் கிருமி தாக்குதல் வரலாம். சிறுநீரகங்கள் தற்காலிகமாக செயலிழக்கலாம் என்று பயமுறுத்துகிறார்களே என்றெல்லாம் நினைக்க தோன்றலாம். நாம் இப்போதுதான் மகப்பேறு என்று பிரசவத்தை ஒரு அழகிய சொல்லாக சொல்கிறோம்.

ஆனால் அந்த காலத்தில் பிரசவம் என்பதை ‘பிர’ ‘சவம்’ என்றுதான் வைத்தார்கள். ஏனென்றால் பிரசவம் என்பது மறு பிறவி என்பதை போலத்தான். பிரசவத்திற்கு உள்ளே செல்லும் பெண்மணி வலியாலும், பயத்தாலும் அழுதபடியேதான் செல்வார். திரும்பி வரும் போது எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலைதான் ஒரு காலத்தில் இருந்தது.

கர்ப்பம் தரித்தால் மட்டும் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் பிரசவத்திற்கு பிறகு சீராகிவிடும். கர்ப்ப காலத்தில் இந்த மாதிரி உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினைகள் உருவாவதற்கு ஐந்து காரணங்கள் உண்டு.

• ஒன்று திருமணத்திற்கு முன்பே உயர் ரத்த அழுத்தம் இருந்திருக்கும். ஆனால் அதை கவனித்திருக்க மாட்டார்கள். கண்டுபிடித்தும் இருக்க மாட்டார்கள். திருமணத்திற்கு பிறகு கருவுற்றதும் பரிசோதனை செய்யும் போது உயர் ரத்த அழுத்தம் இருப்பதை கண்டு பிடித்து இருப்பார்கள்.

• அந்த பெண்கள் சிறு குழந்தையாக இருந்த போதே சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் அதாவது அலர்சி போன்ற நோய்கள் இருந்திருக்கலாம். அது தெரியாமலும் இருந்திருக்கலாம். அல்லது அது குணமாகியும் போயிருக்கலாம். மீண்டும் அதன் விளைவாக இந்த பிரச்சினைகள் உருவாகவும் வாய்ப்பு உண்டு.

• உயர் ரத்த அழுத்தம், புரதம் கழிதல் ஆகியவற்றுடன் இணைந்து சிறுநீரக பிரச்சினைகள் உருவாகலாம். கடைசி மூன்று மாதத்தில் வரும் ரத்த அழுத்தம் பிரசவத்திற்கு பிறகு சீராகி விடும்.

எனவேதான் நவீன மருத்துவத்தில் ஒரு பெண் கர்ப்பம் தரித்ததை உறுதி செய்ததும் மாதந்தோறும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்கின்றனர். அப்போது ரத்த அழுத்தம் சிறுநீர் தொற்று, வயிற்றில் வளரும் கருவின் நிலை ஆகியவற்றை சோதித்து பார்த்து கொள்ள வேண்டும்.

கால் வீக்கம் வந்ததும் கால் வீக்கம்தானே இது கர்ப்பிணியாக இருக்கும் போது வருவதுதான், ஒன்றும் செய்யாது என்று சாதாரணமாக நினைத்து விடவும் கூடாது. மருத்துவத்தில் இப்போது எவ்வளவோ வசதிகள் வந்து விட்டன. வீட்டிலேயே ரத்த அழுத்தம் பார்ப்பதற்கான இயந்திரத்தை வாங்கி வைத்து கொள்ளலாம்.

அதேபோல் சிறுநீர் பரிசோதனைக்கான எளிய முறை வந்திருக்கிறது. அதாவது சிறுநீர் பரிசோதனை ஸ்டிப் மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி சிறுநீர் சோதனையை செய்து கொள்ளலாம்.

பொதுவாக இந்த கால பெண்கள் கர்ப்பம் அடைந்ததும் உடலில் ஏற்படும் மாற்றங்களை பார்த்து கொஞ்சம் வயதானவர்கள் நாங்கள் எல்லாம் குழந்தை பெற்றெடுக்கவில்லையா? இந்த காலத்தில் இப்படித்தான் இருக்கும். எல்லாம் பார்த்து கொள்ளலாம் என்று சொல்வதுண்டு. அப்படி அஜாக்கிரதையாக இருப்பது ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும்.பிரசவத்தை ஆஸ்பத்திரிகளில் பார்ப்பதே தாய்க்கும், குழந்தைக்கும் பாதுகாப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தாண்டிவிட்டோம்.

கர்ப்பிணிகளுக்கு சிறுநீர் தொற்று அதிகமாக ஏற்படும். அதற்கு முக்கிய காரணம் சிறுநீர் பாதையும், பிறப்பு உறுப்பும் அருகருகே இயற்கையாகவே அமைந்திருப்பதுதான். எனவேதான் எளிதில் தொற்று ஏற்படுகிறது. மேலும் கரு வளர வளர கர்ப்பப்பை விரிவடையும். அதன் காரணமாக சிறுநீர் செல்லும் பாதையை அது அழுத்தும். இதனால் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும்போல் தோன்றும்.

சிலருக்கு அறிகுறி எதுவும் இல்லாமல் கூட தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. எனவே சரியான சோதனைகள் அவசியம். இல்லாவிட்டால் அந்த தொற்றுக்கள் மூலம் ஏற்படும் பாதிப்பு ரத்தத்தில் கலந்து செப்டிசீமியா வரும். இதன்மூலம் பல உறுப்புகள் சேதமடைந்து ஆபத்தில் கொண்டுபோய் விடும். குழந்தை கலைந்து போகும் சூழ்நிலை கூட ஏற்படும். முக்கியமாக ரகசியமாக செய்ய வேண்டும் என்பதற்காக சுகாதாரமற்ற சூழ்நிலையில் முறையற்ற முறையில், தகுதி பெறாத மருத்துவர்கள், செவிலியர்கள் மூலம் கருக்கலைப்பு செய்வதால் ரத்த போக்கு ஏற்பட்டு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும்.

இப்போது கருக்கலைப்பு என்பது பெண்ணின் உரிமை ஆகி விட்டது. அப்படி இருந்தும் தவறு செய்து குழந்தை உருவாகி விட்டதே? வெளி உலகிற்கு தெரியாமல் கலைத்து விட வேண்டும் என்று இந்த மாதிரி தகுதியற்ற இடங்களில் சென்று கருக்கலைப்பு செய்கிறார்கள். இதனால் சிறுநீரக செயலிழப்பு மட்டுமல்ல. அதிக ரத்த போக்கு காரணமாக மிக மோசமான சூழ்நிலை ஏற்படும். எனவே இந்த மாதிரி சூழ்நிலைகளை சந்திக்க நேர்ந்தால் எந்த தயக்கமும் இல்லாமல் ஆஸ்பத்திரிகளில் சென்று கருக்கலைப்பு செய்வது நல்லது. அதுதான் அவர்களது உயிருக்கும் பாதுகாப்பு.

சிலர் வீடுகளிலேயே பிரசவம் பார்ப்பார்கள். பிரசவிக்கும் நேரத்தில் பனிக்குடம் உடைந்து செப்டிக் ஆகி சிக்கல் ஏற்பட்டதும் அவசர அவசரமாக தாயையும், சேயையும் தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுவார்கள். அந்த நேர விரையம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

25, 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்படிப்பட்ட சம்பவங்கள் பல நடந்தது உண்டு. மருத்துவ வசதிகள் வளர்ந்துவிட்ட காரணத்திலும், விழிப்புணர்வு அடைந்து விட்ட நிலையிலும் கூட இன்றும் யூடியூப்பை பார்த்து வீட்டில் வைத்தே பிரசவம் பார்க்கும் அளவிற்கு சிலர் செல்கிறார்கள். அவ்வாறு பிரசவம் பார்க்கும் போது நச்சு கொடியை முறையாக அகற்ற முடியாமல் போகலாம். பொதுவாகவே பிரசவ நேரத்தில் ரத்த கசிவு ஏற்படுவது உண்டு.

ஆனால் பயிற்சி பெறாதவர்கள் பிரசவம் பார்க்கும் போது ரத்த கசிவை தடுக்கும் வசதி இருக்காது. அவர்களால் தடுக்கவும் முடியாது. இதனால் ஆபத்து அதிகம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

கர்ப்பிணியாக இருக்கும் போது உயர் ரத்த அழுத்தம், புரதம் கழிதல், கால்கள் வீக்கம் ஆகியவை சேர்ந்து இருப்பதுதான் ஆபத்தானது. இதைதான் டாக்சிமீயா என்கிறோம். இதுவும் சிறுநீரகத்தில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவை பொறுத்தே உருவாகிறது. இது ரத்தத்தில் கலந்து பின்னர் இதயம், மூளை, கல்லீரல் போன்ற உறுப்புகளையும் பாதிப்படைய வைக்கும்.

ரத்த அழுத்தத்தை பொறுத்தவரை 120/80 இருக்க வேண்டும். இதற்கு அதிகமாக இருந்தால் கவனிக்க வேண்டும். பொதுவாக கருத்தரித்த மூன்று மாதங்களுக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருக்கும். அதன் பிறகு ரத்த அழுத்தம் கூடும்.

எனவேதான், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்குச் சிறுநீரக வியாதிகளும் சிறுநீரக வியாதி இருப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தமும் வருவதற்கான வாய்ப்புகள் மிகமிக அதிகம்.
Tags:    

Similar News