ஆன்மிகம்
நத்தத்தில், மாசி திருவிழாவையொட்டி தீர்த்த குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம் வந்த காட்சி.

நத்தத்தில் மாசி திருவிழாவையொட்டி தீர்த்த குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

Published On 2021-02-17 06:15 GMT   |   Update On 2021-02-17 06:15 GMT
நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் புனித நீராடி, புனித தீர்த்தக்குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக சந்தன கருப்புசாமி கோவிலுக்கு வந்தனர்.
நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 2-ம் நாளான நேற்று அதிகாலை உலுப்பகுடி அருகே கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடி, மஞ்சள் ஆடைகள் அணிந்தனர். பின்னர் அங்கிருந்து புனித தீர்த்தக்குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக சந்தன கருப்புசாமி கோவிலுக்கு வந்தனர். 

பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் மஞ்சள் காப்பு கட்டி 15 நாள் விரதம் தொடங்கினர். இதில் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் காப்பு கட்டினர். அதன்பிறகு இரவு 9 மணிக்கு அம்மன் குளத்தில் இருந்து கம்பம் நகர் வலமாக கொண்டுவரப்பட்டு கோவிலில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது.

திருவிழாவில் வருகிற 19, 23, 26-ந்தேதிகளில் அம்மன் சர்வ அலங்காரத்தில் மயில், சிம்மம், அன்ன வாகனத்தில் எழுந்தருளி மின்னொளி ரதத்தில் நத்தம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வருகிறார். இந்த விழா நாட்களில் பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தல், மாவிளக்கு, கரும்பு தொட்டில், அங்கபிரதட்சணம், அலகுகுத்துதல், அரண்மனை பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக அடுத்த மாதம் (மார்ச்) 2-ந்தேதி கழுமரம் ஊன்றி பின்னர் ஏறுதல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பூசாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News