செய்திகள்
கைது

லாரி டிரைவரை மிரட்டி பணம் பறிப்பு- பா.ம.க. மாவட்ட செயலாளர் உள்பட 4 பேர் கைது

Published On 2020-11-24 09:32 GMT   |   Update On 2020-11-24 09:32 GMT
லாரி டிரைவரை மிரட்டி பணம் பறித்ததாக பா.ம.க. மாவட்ட செயலாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பூச்சம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 36). லாரி டிரைவர். இவர் நேற்றுமுன்தினம் இரவு பூச்சம்பட்டியில் இருந்து வாடிப்பட்டி நோக்கி லாரியில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருடைய லாரியை பின் தொடர்ந்து கார் ஒன்று வேகமாக வந்தது.

பூச்சம்பட்டி பிரிவு சாலையில் வந்தபோது திடீரென அந்த காரில் வந்தவர்கள் லாரியை வழிமறித்தனர். பின்னர் காரில் இருந்து இறங்கிய 4 நபர்கள் லாரி டிரைவர் முருகேசனிடம் அரிவாளை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த ரூ. 7 ஆயிரத்து 500-ஐ பறித்தனர். மேலும், எங்களுக்கு மாமூல் கொடுக்காமல் தொழில் செய்ய முடியாது என்று கூறி அவர்கள் கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றதாக தெரியவருகிறது.

இது தொடர்பாக லாரி டிரைவர் முருகேசன், வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், டிரைவரை அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக பா.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர் நவீன்குமார், ஒன்றிய செயலாளர் கார்த்திக், மாவட்ட துணைச் செயலாளர் சீனிராஜேந்திரன், சொக்கலிங்கபுரம் சசி ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News