உள்ளூர் செய்திகள்
புதுச்சேரி

புதுச்சேரியில் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 15-ந்தேதி வரை நீட்டிப்பு

Published On 2021-12-01 02:48 GMT   |   Update On 2021-12-01 02:48 GMT
புதுச்சேரியில் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் 15-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊரடங்கு நடைமுறை அறிவிக்கப்படுகிறது.

தற்போது மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் இரவு 11 மணிமுதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். சமூக, பொழுதுபோக்கு தொடர்பாக மக்கள் கூடுவது தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது

கடற்கரை, பூங்கா போன்றவை இரவு ஊரடங்கு நேரம் தவிர மற்ற நேரங்களில் திறந்திருக்கலாம். இங்கு வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். புதுவை மாநிலத்தில் வழக்கம்போல் கோவில் திருவிழாக்கள், மத விழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 20 பேர் வரையிலும் கலந்துகொள்ளலாம். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுச்சேரி தடுப்பூசி போடுவதில் பின்தங்கியுள்ளது.

எனவே வீடு வீடாக சென்று தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போட வேண்டும். மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பது போல கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்.

இதற்கான உத்தரவை அரசு செயலாளர் உதயகுமார் வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News