வெங்காயம் விலை உயர்வு பற்றி பா.ஜனதாவினருக்கு கவலை இல்லை- கார்த்தி சிதம்பரம்
ஆலந்தூர்:
கார்த்தி சிதம்பரம் எம்.பி. நள்ளிரவு 12 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2007-ம் ஆண்டு நடந்த சம்பவத்துக்காக 2017-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து 2019-ம் ஆண்டு விசாரணைக்காக தேவையில்லாமல் 106 நாட்கள் என் தந்தையை சிறையில் அடைத்து இருந்தது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி தான்.
106 நாட்கள் கழித்து அவர் சிறையில் இருந்து வந்தது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. நேற்று அவர் பாராளுமன்றம் சென்றதால் எப்போதும் போல பா.ஜனதாக அரசுக்கு எதிரான கருத்துக்களை வைத்ததும் மகிழ்ச்சியை தருகிறது.
நாளை (சனிக்கிழமை) ப.சிதம்பரம் சென்னை வருகிறார். சென்னையில் தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டி சார்பாக அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சத்தியமூர்த்தி பவனில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 8-ந் தேதி சொந்த தொகுதியான சிவகங்கை சென்று மக்களை சந்திக்க உள்ளார்.
வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து இருக்கிறது. வெங்காயத்தை சாப்பிடாத பா.ஜ.க.வினருக்கு வெங்காய விலையைப் பற்றியும் கவலை இல்லை. மக்களை பற்றியும் கவலை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.