விளையாட்டு
நீக்க முடியாத கேப்டனாக இருப்பதுதான் கோலியின் விருப்பம் - முன்னாள் வீரர் மஞ்ச்ரேக்கர் கருத்து
டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி விலகியது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணிக்கான இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
மும்பை:
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி திடீரென விலகினார். அவரது விலகல் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இது தொடர்பாக கூறியதாவது:-
குறுகிய கால இடைவெளியில் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக விராட்கோலியின் வாழ்க்கையில் நடந்து விட்டது. முதலில் ஐ.பி.எல். தொடரின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
அதன் பின்னர் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்டார். தற்போது டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகியது யாரும் எதிர்பாராதது. முக்கியமான பொறுப்புகளில் இருந்த கோலி குறுகிய இடைவெளியில் வெளியேறி விட்டார்.
இந்திய கிரிக்கெட்டில் யாரும் நீக்க முடியாக கேப்டனாக வலம் வர வேண்டும் என்று கோலி விரும்பினார். அதனால் தான் அந்த முடிவை கிரிக்கெட் வாரியம் எடுக்கும் முன் தாமாகவே கேப்டன் பதவியை கோலி ராஜினாமா செய்துள்ளார்.
இவ்வாறு மஞ்ச்ரேக்கர் கூறி உள்ளார்.
இதற்கிடையே டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி விலகியது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணிக்கான இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.