கேரளாவில் கொரோனா பாதிப்பு குறையாத மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடு - பினராயி விஜயன்
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கொரோனா 2வது அலை பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை.மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் இதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 19,653 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்க்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நேற்று கேரளாவில் 152 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகினர்.
இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23,591 ஆக உயர்ந்தது.26,711 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மீண்டனர்.
இந்த நிலையில் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிக பாதிப்புள்ள பகுதியில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக கேரள முதல் -மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளதாவது:-
கேரளாவில் கொரோனா பரவல் சில பகுதியில் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் அப்பகுதிகள் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பிற இடங்களுக்கு நோய் பரவுவதை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் வார தொற்று பரவல் விகிதம் 10 சதவீதத்திற்கும் கூடுதலாக உள்ள பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. மேலும் இதை கண்காணித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை அமைப்பு தேவைக்கு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்கள் முறையாக விதிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்கிறார்களா? என்பதை கண்காணித்து மாவட்ட கலெக்டர்கள் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும்.
சுகாதாரத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.