செய்திகள்
முக ஸ்டாலின்

பஞ்சு மீதான 1 சதவீத நுழைவு வரி ரத்து- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Published On 2021-09-04 06:52 GMT   |   Update On 2021-09-04 07:17 GMT
பஞ்சின் மீது விதிக்கப்படும் சந்தை நுழைவு வரியை நீக்க வேண்டுமென்பது தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நெடுநாள் கோரிக்கையாக இருக்கிறது.
சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டு பேசியதாவது:-

நெசவாளர்களின் நலனுக்காக பல்வேறு அறிவிப்புகளையும், நலத்திட்டங்களையும் வழங்கியது திராவிட முன்னேற்றக்கழக அரசு. அதன் தொடர்ச்சியாக, இப்போது நெசவுத்தொழிலை நம்பியிருக்கக்கூடிய நெசவாளர் தோழர்கள் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, ஓர் முக்கிய அறிவிப்பினை பேரவைத் தலைவரின் அனுமதியோடு, 110 விதியின்கீழ் வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்திய துணித்தொழில் வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாடு துணித்தொழில் வகிக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள நூற்பாலைகளின் எண்ணிக்கை 1,570 ஆகும், இவ்வாலைகள் மூலம் நூற்கப்படும் நூல், நாட்டின் மொத்த நூற்புத்திறனில் 45 சதவீதம் ஆகும், தமிழ்நாட்டில் அமைந்துள்ள நூற்பாலைகளுக்குத் தேவையான பஞ்சின் அளவில் 95 சதவீதம் பிற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண் பொருட்கள் விற்பனை (ஒழுங்குமுறை) சட்டம் 1987, பிரிவு 24-ன்படி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சின் விற்பனை மதிப்பு மீது சந்தை நுழைவு வரியாக 1 சதவீதம் விதிக்கப்படுகிறது. மேற்படி சட்டத்தின்படி, பருத்தி பொதி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு ஆகியவை வேளாண் பொருட்களாகக் கருதப்பட்டு, தமிழ்நாட்டிலுள்ள சந்தைப் பகுதிகளில் கொள்முதல் அல்லது விற்பனை செய்யப்படும் பொழுது 1 சதவீதம் வரி (சந்தைக் கட்டணம்) விதிக்கப்படுகிறது.



சந்தை நுழைவு வரி என்பது, பருத்திப் பொதிகள் மீது மட்டுமே விதிக்கப்பட வேண்டும். மாறாக, பஞ்சு மற்றும் கழிவுப்பஞ்சு போன்ற உற்பத்தி பொருட்கள் மீதும் 1 சதவீதம் சந்தை நுழைவு வரி விதிக்கப்படுகிறது.

இதனால் வெளி மாநிலங்களிலிருந்து பஞ்சு கொள்முதல் செய்யப்படும் பொழுது சிறு, குறு நூற்பாலைகள் போக்குவரத்துக் கட்டணம் செலுத்துவதிலே பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

பஞ்சின் மீது விதிக்கப்படும் சந்தை நுழைவு வரியை நீக்க வேண்டுமென்பது தொழில்முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நெடுநாள் கோரிக்கையாக இருக்கிறது. இதனால், மாநிலத்தில் இந்தியப் பருத்திக் கழகம் பஞ்சு நூல் விற்பனையை மேற்கொள்ளும்பொழுது, நூற்பாலைகள் பெரிய அளவிலான பஞ்சு இருப்பினைப் பராமரிக்க வேண்டியதில்லை.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நெசவாளர்களுடன் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டங்களில், இந்த வரியினை நீக்க வேண்டுமென்று தங்களது கோரிக்கையாக அவர்கள் தெரிவித்தனர். இதனைக் கருத்திற்கொண்டு, தொழில்முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, பஞ்சு, கழிவுப்பஞ்சு மீதான ஒரு சதவீதம் வரி (சந்தைக்கட்டணம்) ரத்து செய்யப்படுகிறது. இதற்கான உரிய சட்டதிருத்தம் இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடரிலே கொண்டு வரப்படவிருக்கிறது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.


Tags:    

Similar News