ஆன்மிகம்
கோவில் வளாகத்தில் சிறிய தேரில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேவநாதசுவாமியை படத்தில் காணலாம்.

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் தேரோட்டம்

Published On 2021-09-21 04:11 GMT   |   Update On 2021-09-21 04:11 GMT
திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது. அப்போது பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா“ என்ற பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர்.
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினந்தோறும் தேவநாத சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று காலை மற்றும் மாலையில் சூரிய பிரபை, யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கோவில் உட்புறத்தில் சாமி உலா வந்தார்.

இந்த நிலையில் தற்போது தொற்று நோய் பரவல் காரணமாக சாமி ஊர்வலம் வெளிப்புறத்தில் நடைபெறவில்லை. மேலும் தேரோட்டமும் வெகு விமரிசையாக நடைபெற வில்லை. மாறாக நேற்று 9-ம் நாள் விழாவான பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ தேவி பூதேவி சமேத தேவநாத சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி மற்றும் தேவநாதசுவாமி கோவிலுக்குள் அமைக்கப்பட்ட சிறிய தேரில் எழுந்தருளினர். அப்போது சிறிய தேரை கோவில் ஊழியர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா“ என்ற பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். தேர் கோவில் உட்புறத்தை உலா வந்து நிலையை அடைந்தது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News