செய்திகள்
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்- கவர்னர் உத்தரவு

Published On 2021-08-05 02:37 GMT   |   Update On 2021-08-05 02:37 GMT
புதுவை மாநிலத்தில் தடுப்பூசி போடுவதை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளிலும் மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
புதுச்சேரி:

வாராந்திர கொரோனா மேலாண்மை சீராய்வு கூட்டம் புதுவை கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு 3-வது அலையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், தடுப்பூசி விகிதம், குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை ஆகியவை குறித்து படக்காட்சி மூலம் விளக்கினார்.

தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

புதுவை மாநிலத்தில் தடுப்பூசி போடுவதை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளிலும் மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும். ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் 100 சதவீத இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும். பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 18 வயதுக்கு மேல் விடுபட்டவர்கள், வெளியூர் பயணம் மேற்கொள்பவர்கள் ஆகியோரை அடையாளம் கண்டு தடுப்பூசி செலுத்த வேண்டும். அதற்காக சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொற்று பரவலுக்கான பிற காரணங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். தனியார் மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். மனித சக்தியை அதிகப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி கொரோனா பரிசோதனைகளையும் அதிகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

கூட்டத்தில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் டி.ஜி.பி. ரன்வீர்சிங் கிறிஸ்னியா, உள்ளாட்சித்துறை செயலாளர் வல்லவன், செய்தித்துறை செயலாளர் உதயகுமார், சுகாதாரத்துறை செயலாளர் அருண், பொதுப்பணித்துறை செயலாளர் விக்ராந்த் ராஜா, கவர்னரின் செயலாளர் அபிஜித் விஜய் சவுத்ரி, கொரோனா மேலாண்மை பொறுப்பு அதிகாரி ரமேஷ், உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி சாயிரா பானு, ஜிப்மர் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News