செய்திகள்
கைது

வாடிப்பட்டியில் வாரச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி- வாலிபர் கைது

Published On 2019-12-03 10:25 GMT   |   Update On 2019-12-03 10:25 GMT
வாரச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 2 பேரை தேடி வருகின்றனர்.

மதுரை:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 39). இவரிடம் சிவகங்கை மாவட்டம், கீரனூரைச் சேர்ந்த கோபி, வாடிப்பட்டி அருகே உள்ள தாடையம்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி, சமயநாதன் ஆகியோர் தாங்கள் வாரச் சீட்டு நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் வாரச்சீட்டுடன் கவர்ச்சியான திட்டங்களையும் கூறியதோடு, முடிவில் கட்டிய தொகைக்கும் மேலாக அதிக பணம் கிடைக்கும் என 3 பேரும் கூறியுள்ளனர்.

இதை நம்பிய கண்ணன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரை வாரச்சீட்டில் சேர்த்துள்ளார். இவர்கள் லட்சக்கணக்கில் பணம் கட்டியிருந்தனர்.

இந்த நிலையில் வாரச் சீட்டு கட்டி முடித்த பல பேருக்கு முதிர்வு தொகை வழங்காமல் 3 பேரும் காலம் தாழ்த்தி வந்தனர். இது தொடர்பாக கேட்டபோது எந்த பதிலும் இல்லை.

இதையடுத்து கண்ணன் செக்கானூரணி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அனிதா வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்தார். முனியாண்டி, சமயநாதனை தேடி வருகிறார்.

Tags:    

Similar News