தொழில்நுட்பம்
இந்தியாவில் டிரோன் டெலிவரி சோதனைக்கு அனுமதி பெற்ற ஜொமாட்டோ, ஸ்விக்கி மற்றும் டன்சோ
இந்தியாவில் டிரோன் மூலம் பொருட்களை டெலிவரி செய்வதற்கான சோதனையை துவங்க ஜொமாட்டோ, ஸ்விக்கி மற்றும் டன்சோ நிறுவனங்கள் அனுமதி பெற்றுள்ளன.
ஜொமாட்டோ, ஸ்விக்கி மற்றும் டன்சோ போன்ற நிறுவனங்கள் நாட்டில் டிரோன் விமானங்களை கொண்டு பொருட்களை டெலிவரி செய்வதற்கான சோதனையை துவங்க மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் அனுமதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய இயக்குனரகம் நாட்டில் இயங்கி வரும் பத்து நிறுவனங்களுக்கு டிரோன்களை சோதனை செய்வதற்கான அனுமதியை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை மேலும் அதிகப்படுத்த உதவும்.
'டிரோன் மூலம் டெல்வரி செய்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் புதிய முடிவை வரவேற்கிறோம். வான்வெளியில் உணவு டெலிவரி செய்ய ஆவலோடு காத்திருக்கிறோம்,' என ஜொமாட்டோ நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.
டிரோன் டெலிவரிக்கு சோதனை செய்யும் அனுமதியுடன், சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களின் கான்செப்ட் விவரங்களை செப்டம்பர் மாதத்திற்குள் சமர்பிக்க மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.