குடும்ப தகராறில் விபரீதம்: மாமனாரை கொன்ற மருமகன் கைது
திருவையாறு:
தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த ஆவிக்கரை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் கலியன் மகன் சண்முகம்(45). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ராஜலட்சுமி எனும் மனைவியும், 4 மகள்களும் ,2 மகன்களும் உள்ளனர்.
சண்முகம் தனது மூத்தமகள் செண்பகத்தை துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் செந்தில் குமார் (28) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
நேற்று ஆவிக்கரையில் குடும்ப பிரச்சனை காரணமாக மருமகன் செந்தில் குமாருக்கும் மாமனார் சண்முகத்திற்கும் தகராறு நடந்தது. தகராறு முற்றிப்போய் மருமகன் செந்தில்குமார் கையால் அடித்து தள்ளிவிட்டு மோதியதில் கீழே விழுந்த சண்முகத்திற்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு போலீஸ் டிஎஸ்பி பெரியண்ணன், இன்ஸ் பெக்டர்கள் ஜெகதீசன், கென்னடி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சண்முகம் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து திருவையாறு போலீசார் வழக்குபதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.