செய்திகள்
குடும்பத்தினருடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய முதலமைச்சர்

குடும்பத்தினருடன் வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய முதலமைச்சர்

Published On 2020-08-22 08:19 GMT   |   Update On 2020-08-22 08:19 GMT
சேலத்தில் உள்ள வீட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்.
சேலம்:

முழுமுதற் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது, ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் சதுர்த்தி தினமான இன்று பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து, வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க, ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் எடப்பாடியில் உள்ள அவரது இல்லத்தின் வெளியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து, தீபாராதனை காட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிபாடு நடத்தினார். சமூக இடைவெளியுடன் அவரவர் வீடுகளிலேயே விழாக்களை கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதனை நிரூபிக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் விநாயகர் சிலையை பூஜைகள் செய்து, தோப்புக்கரணம் போட்டு விழாவை கொண்டாடினார். இதில், அவரது மனைவி மற்றும் மகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதேபோல விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வரசக்தி விநாயகர் கோவிலில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
Tags:    

Similar News