செய்திகள்

மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை - சுப்ரீம் கோர்ட்

Published On 2018-12-03 07:10 GMT   |   Update On 2018-12-03 07:10 GMT
சென்னை மெரினா கடற்கரையில் யாரும் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று திட்டவட்டமாக தெரிவித்தது. #SCrefuses #TNgovtban #protestsinMarina #Marinaprotests
புதுடெல்லி:

ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை மெரினா கடற்கரையில் பெருந்திரளான தமிழர்கள் நடத்திய போராட்டம் வெற்றியில் முடிந்தது.

இந்த போராட்டத்துக்கு பின்னர் மெரினாவில் போராட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்த தமிழக அரசு தடை விதித்தது.

இந்நிலையில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த ஒருநாளைக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.



இதற்கு தனி நீதிபதி அளித்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் தனி நீதிபதி அளித்த அனுமதி ரத்து செய்யப்பட்டது. மெரினா விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது தொடர்பான தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது என்று தெரிவித்த ஐகோர்ட், அய்யாகண்ணுவின் மனுவை தள்ளுபடி செய்தது.

இதனைத் தொடர்ந்து மெரினாவில் போராட்டத்திற்கு அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் அய்யாக்கண்ணு மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது. மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கும் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இதே கோரிக்கையுடன் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. #SCrefuses #TNgovtban #protestsinMarina #Marinaprotests
Tags:    

Similar News