தொழில்நுட்பம்
புது விதிகளை ஏற்கும் விவகாரத்தில் ட்விட்டருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்கும் வகையில் இந்தியாவுக்கான அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசு பிறப்பித்து இருக்கும் புதிய விதிமுறைகளை ஏற்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. விதிகளை ஏற்கும் விவகாரம் குறித்து வழக்கறிஞர் அமித் ஆச்சார்யா தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேகா பள்ளி அரசு மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.
மனுதாரின் மனுவில், `ட்விட்டரில் நான் எதிர்கொண்ட பதிவு குறித்து குறைதீர்க்கும் அதிகாரியை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவரின் தொடர்பு விவரங்களை கண்டறிய இயலவில்லை. ட்விட்டர் நிறுவனம் அமெரிக்கரை அதிகாரியாக நியமித்து இருக்கிறது. ஆனால் இது சமீபத்திய தகவல் தொழில்நுட்ப விதிகளை முறையாக ஏற்கும் வகையில் இல்லை,' என குறிப்பிட்டு இருக்கிறார்.
நீதிமன்ற உத்தரவுக்கு பதில் அளித்த ட்விட்டர், அரசு விதித்த புது கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை ஏற்கும் வகையில் குறைதீர்க்கும் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்து இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.