பெண்கள் உலகம்
வாழ்வை செம்மையாய் செதுக்க உதவும் பிளானர்கள்

வாழ்வை செம்மையாய் செதுக்க உதவும் பிளானர்கள்

Published On 2022-01-05 02:30 GMT   |   Update On 2022-01-05 02:30 GMT
நம்முடைய வாழ்நாளில் ஒவ்வொரு நாளையும் நாம் நம் விருப்பப்படி முன்னேற்றமான விதத்தில் செதுக்கிக் கொள்ள இந்த பிளானர்கள் நமக்கு உதவுகிறது என்றால் மிகையல்ல.
நாம் தினசரி வாழ்க்கையில் பல விஷயங்களை செய்கிறோம். இதில் நாம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் காரியங்கள் சிலவாகவும் தேவையில்லாத செயல்கள் பலவாகவும் அமைந்துவிடுகிறது. இதை நினைத்து பின்பு தான் நாம் வருந்துகிறோம். ஒவ்வொரு விஷயத்தையும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறோம். ஆனால் செயல் புரியும் பொழுது திட்டமிட்டபடியே செயல் புரிய முடியாமல் பல விஷயங்களை மறந்து, சில விஷயங்களை ஞாபகம் இருந்தும் செய்ய முடியாமலும் தவறாக செய்து விடுகிறோம். இப்படித்தான் நம் வாழ்க்கை முறை ஆரோக்கியமற்றதாக ஆகிவிடுகிறது. இந்த மாதிரியான பிரச்சனைக்கு தீர்வாக இருப்பதுதான் பிளானர்.

ஒவ்வொருவரும் வருடத்தின் ஆரம்பத்தில் இவ்வாறு பல திட்டமிடுதல் (பிளானிங்) செய்வார்கள். ஆனால் அதன்படி நடக்க முடியாமல் திணறுகிறார்கள். இந்த நேரத்தில் நம் உற்ற நண்பனாக தினசரி நாம் செய்யும் காரியங்களை திட்டமிடவும் பட்டியலிடவும் அதை ஒழுங்காக செய்து முடிக்கவும் நமக்கு உதவுவது ப்ளானர்கள். இது பிரிண்ட் பேப்பர் ஆக புத்தக வடிவிலும், டிஜிட்டல் முறையிலும் நமக்கு கிடைக்கிறது. இந்த ப்ளானர்கள் தினசரி பிளானர், வாராந்திர மாதாந்திர பிளானர் என்று கிடைக்கின்றன. மாதாந்திர பிளானரில் ஒரு மாதம் முழுவதும் நாம் செய்ய வேண்டிய வேலைகளை மேலோட்டமாக குறித்துக் கொள்வதற்கு உபயோகமாக இருக்கிறது. வாராந்திர கேலண்டர் என்பதில் நாம் ஒரு வாரம் முழுவதும் செய்ய வேண்டிய செயல்களை அன்றன்று செய்ய வேண்டியவையாக பிரித்து திட்டமிட உதவுகிறது. தினசரி என்பதில் பல விஷயங்கள் உள்ளடங்கியுள்ளது.

தற்போதைய ப்ளானர்கள் அழகிய வண்ண காகிதங்கள் கொண்ட புத்தகமாகவும் கிடைக்கின்றன. இதில் ஒவ்வொரு நாளும் நாம் செய்ய வேண்டிய போன்கால்கள், உடற்பயிற்சி செய்யும் நேரங்கள், நம் இதயத்துடிப்பு ரத்த அழுத்தம் போன்றவைகள் குறித்துக் கொள்வதற்கும் முடிகிறது. அதேபோல் நாம் ஒரு நாளைக்கு எத்தனை அடிகள் நடந்து இருக்கிறோம் என்பதை கணக்கிடுவதற்கு கூட இதில் குறிப்பு இருக்கிறது. ஒவ்வொரு நாளின் முடிவிலும் நாம் செய்த தவறான செயல்களை குறைத்துக் கொள்வதற்கும் செய்து முடித்து செயல்களை எண்ணி பெருமிதப்படுவதற்கும் இது வழிவகுக்கிறது.

ஆரோக்கியமான உணவுமுறை என்பது நாம் என்ன பொருட்களை மூன்று வேளையும் சாப்பிடுகிறோம் என்பதும் நொறுக்குத் தீனியாக என்ன சாப்பிடுகிறோம் என்பதும் டீ காபி போன்றவைகளை எத்தனை முறை அருந்துகிறோம் என்பதும் அடங்கும். இதைப்பற்றிய கணக்கை நாம் பொதுவாக வைத்திருப்பதில்லை. ஆனால் இந்த ப்ளானர்களில் நாம் தினமும் இந்த விஷயங்களைக் குறிப்பிடும்போது ஒரு வாரத்திற்கு பிறகு நாம் தேவையில்லாமல் எவ்வளவு பொருட்களை சாப்பிட்டு இருக்கிறோம் என்பதை கணக்கு பார்க்கும் பொழுது நாம் எங்கெல்லாம் ஒழுங்குபடுத்த வேண்டும் என்பது நமக்கு புரிந்துவிடும். எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் எந்த உணவுகளை கூட்ட வேண்டும் என்பதையும் நாம் இந்த பிளானர் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தொலைபேசி அழைப்புகள்: தினசரி நாம் யாருக்கெல்லாம் தொலைபேசியில் அழைக்க வேண்டும் என்பதை வேலை குடும்பம் நட்பு என்று வகைப்படுத்தி இதில் கொடுக்கப்பட்டிருக்கும். அப்பொழுது தினசரி நாம் வேலைக்காக எத்தனை முறை போனில் பேசுகிறோம் நண்பர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் போதுமான நேரம் ஒதுக்குகிறோமா என்பது போன்ற விஷயங்கள் நமக்கு தெரிந்துவிடும். இதையும் நாம் சரி செய்து கொள்வதற்கு இந்த பிளானர் உதவிகரமாக இருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய பிறந்த நாள் திருமண நாள் போன்றவை மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியது. எவ்வளவு வயதானாலும் தன் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறுவதை கேட்பதற்கு எல்லோருக்குமே மகிழ்ச்சிதான். அப்படி இருக்கையில் நாம் நம் உற்றார் உறவினர் நண்பர்கள் நம்முடன் வேலை செய்பவர்கள் என்று அனைவரின் பிறந்தநாளையும் மற்ற முக்கிய தினங்களையும் ஞாபகம் வைத்து வாழ்த்தும் பொழுது நம் உறவு பலப்படுகிறது. இதற்கும் இந்த பிளானர் நமக்கு உதவுகிறது.

உடலுழைப்பு என்பதும் நமக்கு பல நோய்களை தவிர்க்க உதவும் ஒரு முக்கிய அம்சமாகும் இன்று உடல் பருமன் மற்றும் உடற்பயிற்சி இன்மையால் நீரிழிவு ரத்தக் குழாய் நோய்கள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே உடற்பயிற்சி என்பது ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் நாம் செய்கிறோம் என்பதை இந்த ப்ளானர்கள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். வாரத்தில் ஐந்து நாட்கள் தினசரி அரைமணி நேரமாவது ஒருவர் உடல் உழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அந்த அளவில் நம்மளுடைய உடற்பயிற்சி இருக்கிறதா என்பதை கணக்கிடுவதற்கு இந்த பிளானர் நமக்கு உதவிகரமாக இருக்கிறது.

நம்முடைய உணர்வு நிலையை கணக்கிடும் ஒரு பட்டியலும் இந்த ப்ளானர்களில் அடங்கியிருக்கிறது. நாம் கவலையாக, சந்தோஷமாக இருந்த நேரங்கள், நாம் பொறாமைப்பட்ட தருணங்கள், நாம் கோபப்பட்ட தருணங்கள் என்பதை எல்லாம் நாம் இதில் குறித்து வைத்து ஒரு வாரத்திற்குப் பிறகு ஒவ்வொரு வாரமும் இதை எடுத்து பார்க்கும் போது பெரும்பான்மையான நேரங்களில் நாம் எந்த மனநிலையில் இருந்து இருக்கிறோம் என்பதை நமக்கு சுட்டிக் காட்டி விடும். இதன் மூலம் நாம் நம் உணர்வுகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் அவற்றை மேம்படுத்திக் கொள்ளவும் நமக்கு உறுதுணையாக இருக்கிறது.

எனவே நம்முடைய வாழ்நாளில் ஒவ்வொரு நாளையும் நாம் நம் விருப்பப்படி முன்னேற்றமான விதத்தில் செதுக்கிக் கொள்ள இந்த பிளானர்கள் நமக்கு உதவுகிறது என்றால் மிகையல்ல.
Tags:    

Similar News