செய்திகள்
சிறை

நடுக்கடலில் மோதல் விவகாரம்- மீனவர்கள் 30 பேருக்கு முன்ஜாமீன்

Published On 2021-09-25 03:04 GMT   |   Update On 2021-09-25 03:04 GMT
மீனவர்களுக்கிடையே மீண்டும் நடுக்கடலில் மோதல் ஏற்படாமல் இருக்க கடலோர காவல்படை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுச்சேரியில் சுருக்கு வலை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக வீராம்பட்டினம், நல்லவாடு மீனவர்களுக்கு இடையே கடலுக்குள் மோதல் ஏற்பட்டது. நல்லவாடு மீனவர்களுக்கு ஆதரவாக வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் செயல்பட்டனர். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி மோதலை தடுத்தனர். இதனை தொடர்ந்து 3 மீனவ கிராமங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஒதியஞ்சாலை, அரியாங்குப்பம், தவளக்குப்பம் போலீசார் 800-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், நமச்சிவாயம் தலைமையில் 3 மீனவ கிராம பிரதிநிதிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, 3 மீனவ கிராமங்களிலும் 144 தடை உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது.

இதற்கிடையே மோதல் வழக்கில் தொடர்புடைய மீனவர்கள் சிலர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்ஜாமீன் கேட்டு புதுவை கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இதில் நேற்று 30 பேருக்கு கோர்ட்டு முன் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் பலரின் முன்ஜாமீன் மனு விசாரணையில் உள்ளது.

இதற்கிடையே தற்போது மீனவர்கள் கடலில் மீன்பிடித்து வருகின்றனர். எனவே மீண்டும் நடுக்கடலில் மோதல் ஏற்படாமல் இருக்க கடலோர காவல்படை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News