செய்திகள்
தற்கொலை

காதல் திருமணம் செய்த மறுநாளே புதுமாப்பிள்ளை தற்கொலை

Published On 2021-09-22 04:02 GMT   |   Update On 2021-09-22 04:02 GMT
கோத்தகிரி அருகே திருமணமான மறுநாளே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வள்ளுவர்காலனி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் மோகன் பாபு (வயது 21). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. கோத்தகிரி அருகே குமரன்காலனியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவருடைய மகள் கவுசல்யா (வயது 21). இவர்கள், கடந்த 1½ ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கவுசல்யா திருப்பூரில் தங்கி பனியன் கம்பெனி ஒன்றில் தொழிலாளியாக வேலை வந்தார். இந்த நிலையில் கவுசல்யாவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இது பற்றி கவுசல்யா தனது காதலன் மோகன் பாபுவிடம், தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதால் தன்னைஅழைத்து சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி உள்ளார். இதையடுத்து மோகன்பாபு, 19-ந் தேதி திருப்பூருக்கு சென்று கவுசல்யாவை அழைத்துக் கொண்டு மேட்டுப்பாளையத்துக்கு வந்தார். அங்குள்ள ஒரு கோவிலில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள், கோத்தகிரியில் உள்ள மோகன்பாபுவின் வீட்டிற்கு வந்தனர். மோகன்பாபு திருமண கோலத்தில் வந்து நிற்பதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

தங்களுக்கு தெரியாமல் திருமணம் செய்ததால் கவுசல்யா மற்றும் மோகன்பாபுவிடம் அவருடைய பெற்றோர் பேசாமல் இருந்துள்ளனர். அதோடு தனிக்குடித்தனம் செல்லுமாறு மோகன்பாபுவிடம் அவர்கள் கூறியுள்ளனர். திருமணத்தை ஏற்றுக்கொள்ளாததோடு பெற்றோர் பேசாததால் மோகன்பாபு மனமுடைந்தார். இதனால் 20-ந் தேதி காலை மோகன்பாபு தனது மனைவி கவுசல்யாவை அழைத்துக்கொண்டு, மேட்டுப்பாளையத்துக்கு சென்று பஸ் நிலையத்தில் கவுசல்யாவை உட்கார வைத்து விட்டு கோத்தகிரிக்கு சென்று விட்டு உடைகளை எடுத்து விட்டு வருகிறேன். அதுவரை காத்திருந்து என்று கூறி விட்டு கோத்தகிரி சென்றார்.

அன்று மாலை 4 மணி ஆகியும் மோகன்பாபு வராததால் கவுசல்யா அவருடைய செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது, அவர் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவதாக கூறியுள்ளார். அதன்பிறகு அவரது செல்போனுக்கு பலமுறை தொடர்பு கொண்ட போதும் செல்போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. இதனால் சந்தேகமடைந்த கவுசல்யா, மோகன்பாபுவின் அண்ணன் மணிகண்டனுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே அவர், வீட்டிற்கு சென்று பார்த்தபோது உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. உடனே அவர் ஜன்னலை உடைத்து பார்த்தபோது, மோகன் பாபு அங்குள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோகன்பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் கவுசல்யா நேற்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன்பாபுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று மாலை மோகன்பாபுவின் உடல் அவரது உறவினர்களிடம் வழங்கப்பட்டது. திருமணமான மறுநாளே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News