செய்திகள்
நிவர் புயலால் 144 மின்கம்பங்கள் மட்டுமே சாய்ந்துள்ளன- அமைச்சர் தங்கமணி
விழுப்புரம், கடலூரில் நிவர் புயலால் 144 மின்கம்பங்கள் மட்டுமே சாய்ந்துள்ளன என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
சென்னை:
நிவர் புயல் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது, தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மணிக்கு 110 கி.மீ. முதல் 130 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது.
நிவர் புயலின் காரணமாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையிலும் இரவு பலத்த காற்று வீசியதால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் தங்கமணி கூறியதாவது,
விழுப்புரம், கடலூரில் நிவர் புயலால் 144 மின்கம்பங்கள் மட்டுமே சாய்ந்துள்ளன. சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டில் தான் மின்விநியோகம் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் 177 இடங்களில் மின்விநியோகம் கொடுக்கப்பட வேண்டியுள்ளது.
பெரும்பாக்கம், மடிப்பாக்கத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மின் இணைப்பு தர இயலாத சூழல் உள்ளது. மழை நீர் வடிந்த பிறகு படிப்படியாக மின்நியோகம் வழங்கப்படும். மின்சாரம் நிறுத்ததப்பட்டுள்ள பகுதிகளில் இரவு 8 மணிக்குள் 80% மின்விநியோகம் வழங்கப்பட்டுவிடும் என்றார்.