உள்ளூர் செய்திகள்
ஆறுமுகநேரியில் வாகன விபத்தில் பூக்கடைக்காரர் பலி
ஆறுமுகநேரி நடராஜா நகரில் வசித்து வந்த பூக்கடை உரிமையாளர் ரோட்டை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி நடராஜா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் சுடலை (வயது69).
இவர் தனது மகளான மீனா, மருமகன் மகாராஜன் ஆகியோருடன் சேர்ந்து ஆறுமுகநேரி மெயின் பஜாரில் பூக்கடை நடத்தி வந்தார்.
நேற்று இரவு வியாபாரம் முடித்தபின் வீட்டிற்கு செல்வதற்காக மெயின் பஜாரில் ரோட்டை கடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் அவர் மீது வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் படுகாயம் அடைந்த சுடலை உடனடியாக திருச் செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கு காரணமான வாகனத்தை ஓட்டிச் சென்றது யார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.