ஆன்மிகம்
9 மாதங்களுக்கு பிறகு திருவண்ணாமலை மாடவீதிகளில் உலா வரும் உற்சவ மூர்த்திகள்
திருவண்ணாமலையில் தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில் 9 மாதங்களுக்கு பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சாமி வீதி உலாவிற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்ராயண புண்ணிய கால உற்சவம் கடந்த 5-ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கார்த்திகை தீப விழாவுக்கு சாமி ஊர்வலம் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது நடைபெற்றுவரும் உத்ராயணபுண்ணிய கால உற்சவத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாடவீதிகளில் உற்சவ மூர்த்திகள் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
நேற்று இரவு 8 மணி அளவில் நாதஸ்வரம் மற்றும் தவில் இசை முழங்க மாட வீதிகளில் சந்திரசேகரர் சமேத சிவகாமி அம்மன், விநாயகர் உற்சவ மூர்த்திகள் உலா வந்தனர். இதை யொட்டி நான்கு மாட வீதிகளிலும் பக்தர்கள் தங்களது வீடுகள் முன்பு நின்று வீதி உலா வந்த உற்சவ மூர்த்திகளை தரிசனம் செய்தனர்.
கோவிலை வலம் வந்த உற்சவ மூர்த்திகளைஆங்காங்கே நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆனால் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவியதால் பல மாதங்கள் சாமி ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனால் சாமிகள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. ஆனால் தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில் 9 மாதங்களுக்கு பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சாமி வீதி உலாவிற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.