உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க.

வரும் 7-ந்தேதி அ.தி.மு.க. தலைமைக்கான தேர்தல்: கட்சி தலைமை அறிவிப்பு

Published On 2021-12-02 06:02 GMT   |   Update On 2021-12-02 08:55 GMT
பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தேர்தலை நடத்தும் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் வருகிற 7-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை இன்று அறிவித்தது. இதுதொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. சட்ட திட்ட விதி - 30, பிரிவு - 2ன்படி  ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் டிசம்பர் 7-ந்தேதி நடைபெறும். தேர்தல்  நடத்தும் ஆணையாளர்களாக சி.பொன்னையன், பொள்ளாச்சி வி. ஜெயராமன் செயல்படுவார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான  வேட்பு மனு தாக்கல் 3.12.2021 ( வெள்ளிக்கிழமை ) நடைபெறுகிறது. 4.12.2021 (சனிக் கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். 6.12.2021 (திங்கட் கிழமை) மாலை 4 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7.12.2021 (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 8.12.2021 ( புதன் கிழமை) நடைபெறும் என்றும் அன்றே தேர்தல் முடிவு வெளியாகும்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்ட விதிமுறைகளின்படி, முதற்கட்டமாக  கிளை நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு  நிர்வாகிகள், நகர வார்டு  நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி வட்ட நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான அமைப்புத் தேர்தல் 13.12.2021 முதல் 23.12.2021 வரை இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட தேர்தல் 13.12.2021 (திங்கட்கிழமை ), 14.12.2021 (செவ்வாய்க்கிழமை) ஆகிய தேதிகளில்  கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருநெல்வேலி, விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் , கரூர், நீலகிரி, ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு,  ஈரோடு புறநகர் மேற்கு,  சேலம் மாநகர், சேலம் புறநகர், நாமக்கல், விழுப்புரம் , கிருஷ்ணகிரி கிழக்கு , கிருஷ்ணகிரி மேற்கு , திருவண்ணாமலை வடக்கு , திருவண்ணாமலை தெற்கு , காஞ்சிபுரம்,  திருவள்ளூர் கிழக்கு , திருவள்ளூர் தெற்கு,  திருவள்ளூர் வடக்கு,  திருவள்ளூர் மத்தியம் ,  திருவள்ளூர் மேற்கு, செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு ஆகிய பகுதிகளுக்கு நடைபெறுகிறது.

2-ஆவது கட்ட தேர்தல்  22.12.2021 (புதன்கிழமை) 23.12.2021 (வியாழக்கிழமை ) ஆகிய நாட்களில் தூத்துக்குடி வடக்கு ,  தூத்துக்குடி தெற்கு,  சிவகங்கை , ராமநாதபுரம்,  தேனி , திண்டுக்கல் கிழக்கு , திண்டுக்கல் மேற்கு , திருவாரூர், புதுக்கோட்டை வடக்கு ,புதுக்கோட்டை தெற்கு ,தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு , திருச்சி புறநகர் தெற்கு , திருச்சி மாநகர் , திருச்சி புறநகர் வடக்கு, கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு,  திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, திருப்பூர் புறநகர் மேற்கு , தருமபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர் மாநகர், திருப்பத்தூர், வேலூர் புறநகர், கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு , ராணிப்பேட்டை, வட சென்னை வடக்கு (கிழக்கு) , வட சென்னை வடக்கு (மேற்கு) , வட சென்னை தெற்கு (கிழக்கு), வட சென்னை தெற்கு (மேற்கு), சென்னை புறநகர், தென் சென்னை வடக்கு (கிழக்கு) , தென் சென்னை வடக்கு (மேற்கு) தென் சென்னை தெற்கு (கிழக்கு) தென் சென்னை தெற்கு (மேற்கு) உள்ளிடட பகுதிகளுக்கு நடைபெறும் என்று அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் போட்டியிட விரும்புபவர்கள், விருப்ப மனு விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி, அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதன்படி கிளை கழக நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி வார்டு கழக செயலாளர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ரூ.300 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். நகர வார்டு கழக செயலாளர் பதவிக்கான தேர்தல் விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வட்டக் கழக செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு விண்ணப்ப கட்டணம் ரூ.2 ஆயிரம் என அதிமுக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான மினிட் புத்தகம், விண்ணப்பப் படிவம், ரசீது புத்தகம், வெற்றிப் படிவம் முதலானவற்றை தேர்தல் நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே தலைமைக் கழகத்தில் இருந்து பெற்றுச் சென்று அவற்றை, மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். 

மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள், தேர்தல் ஆணையாளர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும். மேலும், தேர்தல் நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் முழுமையாக செய்திட வேண்டும். 

மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் தேர்தல்களை நடத்தி முடித்து, வெற்றிப் படிவம், ரசீது புத்தகம் மற்றும் விண்ணப்பக் கட்டணம் முதலானவற்றை தேர்தல் முடிவுற்ற இரண்டு நாட்களுக்குள், சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணையாளர்களிடம் இருந்து பெற்று அதனை தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News