தமிழ்நாடு
காய்கறிகள்

தொடர்ந்து வரும் முகூர்த்த நாட்களால் காய்கறி விலை எகிறியது

Published On 2021-12-08 09:02 GMT   |   Update On 2021-12-08 09:02 GMT
காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தினசரி கடைக்கு செல்லும் இல்லத்தரசிகள் பலர் செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர்.
போரூர்:

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று மொத்தம் 260 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்தது. தக்காளி மட்டும் 44 லாரிகளில் வந்தன.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் கடந்த மாதம் பெய்த கனமழையால் காய்கறி தோட்டங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு நாசமானது. உற்பத்தி பாதிக்கப்பட்டு சந்தைக்கு வரத்து திடீரென பாதியாக குறைந்ததால் காய்கறி விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது.

தக்காளியை தொடர்ந்து கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், பீன்ஸ், முருங்கைக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலையும் உச்சத்தை எட்டி உள்ளது.

கடந்த சில நாட்களாக முருங்கைக்காய் விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.270க்கும் சில்லரை கடைகளில் ரூ.300க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி கிலோ ரூ.100-க்கும் சில்லரை கடைகளில் ரூ.120 வரையும் விற்கப்படுகிறது.

இன்று தொடங்கி அடுத்தடுத்து தொடர்ந்து 3 நாட்களுக்கு சுபமுகூர்த்த நாட்கள் என்பதால் வழக்கத்தை விட காய்கறி தேவை அதிகரித்து விலையும் உயர்ந்து வருகிறது என்றும் இந்த விலை உயர்வு பொங்கல் பண்டிகை வரை நீடிக்கும் என்றும் காய்கறி மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தினசரி கடைக்கு செல்லும் இல்லத்தரசிகள் பலர் செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை விபரம் வருமாறு:-

தக்காளி-ரூ.100, வெங்காயம்-ரூ.40, சின்ன வெங்காயம்-ரூ.60, உருளைக்கிழங்கு-ரூ35, உஜாலா கத்தரிக்காய்- ரூ.100, அவரைக்காய்- ரூ.80, பீன்ஸ்-ரூ.70, வெண்டைக்காய்-ரூ.80, முருங்கைக்காய்-ரூ.300, ஊட்டி கேரட்-ரூ.70, ஊட்டி பீட்ரூட்-ரூ.60, முட்டை கோஸ்-ரூ. 60, முள்ளங்கி-ரூ.70, புடலங்காய்-70, சுரக்காய்-60, கோவக்காய்-ரூ.60, சவ்சவ்-ரூ.30, வெள்ளரிக்காய்-ரூ.30, இஞ்சி-ரூ.30, பச்சை மிளகாய்-ரூ.35.
Tags:    

Similar News