உள்ளூர் செய்திகள்
கடையநல்லூர் ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கடையநல்லூரில் ரேஷன் கடைகளை கலெக்டர் கோபால சுந்தரராஜ் ஆய்வு செய்தார்.
கடையநல்லூர்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
கடையநல்லூர் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதை கலெக்டர் கோபாலசுந்தரராஜ் நேரில் சென்று பார்வையிட்டார்.
பொதுமக்களுக்கு வழங்கும் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்கள் தரமானதாகவும், சரியான எடையில் அனைத்து பொருட்களும் உள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களில், குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிட வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அப்பொழுது குடிமைப்பொருள் தாசில்தார் ரத்னபிரபா உடன் இருந்தார்.