உள்ளூர் செய்திகள்
போலீஸ் தேர்வுக்கு வருவோருக்கு கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு
புதுவையில் போலீஸ் தேர்வுக்கு வருவோருக்கு கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை காவல் துறை தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தகுதியான விண்ணப்பதாரர்கள், உடல் தகுதித்தேர்வுக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் இருந்து 48 மணி நேரத்துக்கு முன்பாக ஆர்.டி.பி.சி.ஆர். நெகடிவ் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதில் சிரமம் உள்ளதாக ஆட்சேபனை எழுந்தது.
இதனால் புதுவை பிராந்திய விண்ணப்பதாரர்கள் கொரோனா தொற்றுக்கான விரைவு ஆண்டிஜென் சோதனையை (ரேட்) தங்கள் அனுமதி அட்டையை காண்பித்து, காவல்துறை விருந்தினர் மாளிகையில் அமைந்துள்ள பரிசோதனை மையத்தில் வரும் 18-ந்தேதி முதல் சனிக்கிழமை தவிர, தினமும் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பரிசோதனை செய்து கொள்ளலாம்.
காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்திய விண்ணப்பதாரர்கள், அந்தந்த பிராந்தியத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பரிசோதனை செய்யலாம். தகுதித்தேர்வு தேதி, நேரத்துக்கு ஒரு நாள் முன்னதாக ரேபிட் ஆன்டிஜென் சோதனையை செய்ய வேண்டும். முடிவு ஒரு மணி நேரத்துக்குள் வழங்கப்படும். தொற்று உறுதி செய்யப்பட்டால் ஆஸ்பத்திரிக்கு பரிந்துரைக்கப்படுவர். 10 நாள் சிகிச்சைகச்கு பின் தகுதி தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.