செய்திகள்
போராட்டம்

எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் மீது தாக்குதல்: வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம்

Published On 2021-04-07 08:45 GMT   |   Update On 2021-04-07 08:45 GMT
மளிகை கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தனர்.

பனமரத்துப்பட்டி:

சேலம் அருகே உள்ள மல்லூர் பேரூராட்சிக்குப்பட்ட திருச்சி மெயின்ரோடு பகுதியில் வசித்து வருபவர் பாண்டுரங்கன். இவரது மகன் வெங்கடசுந்தரம் (வயது 28). இவர், அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு மல்லூர் அருகே உள்ள வாழகுட்டப்பட்டி பகுதியை சேர்ந்த 2 பேர் மோட்டார்சைக்கிளில் அங்கு வந்தனர். கடையில் அவர்கள், டியூப் லைட் வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றனர். பின்னர் அந்த டியூப் லைட் பழுதாகி விட்டதாக கூறி திரும்ப கடைக்கு வந்து அதற்கு பதில் வேறு டியூப் லைட் கொடுக்குமாறு கேட்டனர்.

இதையடுத்து பழுதானதாக கூறப்பட்ட டியூப் லைட்டை வெங்கடசுந்தரம் சோதனை செய்து பார்த்தார். அப்போது அது நன்றாக எரிந்தது. ஆனால் அவர்கள் இருப்பினும் வேறு டியூப் லைட்டை தருமாறு கேட்டனர். அதற்கு வெங்கடசுந்தரம் வாராண்டி எழுதியாச்சு, வேறு மாற்றி தரமுடியாது என கூறினார்.

இதனால் 2 தரப்புக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் அவர்கள் திடீரென வெங்கடசுந்தரத்தை தாக்கினர்.

இந்த வாக்குவாதத்தை அறிந்து அக்கம்- பக்கத்தினர் அங்கு வரவே மர்ம நபர்கள் 2 பேரும் மோட்டார்சைக்கில் தப்பி சென்று விட்டனர். இது குறித்து வெங்கடசுந்தரம் மல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், வெங்கடசுந்தரத்தை அடித்த மர்ம நபர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

இன்று காலை அந்த நபர்கள் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வெங்கடசுந்தரத்துக்கு ஆதரவாக மல்லூரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது.

மளிகை கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தனர். வியாபாரிகளின் இந்த கடையடைப்பு போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News