செய்திகள்
கோப்புபடம்

சொத்து தகராறில் தந்தையை எரித்துக்கொன்ற மகன் - திருப்பூரில் பயங்கரம்

Published On 2021-09-02 11:16 GMT   |   Update On 2021-09-02 11:16 GMT
முன்னதாக மரணத்தின் விளிம்பில் இருந்த குமாரசாமியிடம் மங்கலம் போலீசார் மற்றும் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மங்கலம் அருகே உள்ள இச்சிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (வயது  90). இவரது மகன் மாரப்பன் (55). இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். 

சம்பவத்தன்று இரவு குமாரசாமி வீட்டின் முன்பு படுத்து தூங்கி கொண்டிருந்தார். திடீரென உடலில் தீப்பற்றிய நிலையில் அங்கும் இங்கும் ஓடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று உடலில் பற்றிய தீயை அணைத்தனர்.

பின்னர் தீக்காயமடைந்த அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமாரசாமி இறந்தார். முன்னதாக மரணத்தின் விளிம்பில் இருந்த குமாரசாமியிடம் மங்கலம் போலீசார் மற்றும் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றனர். 

அப்போது குமாரசாமி, தூங்கி கொண்டிருந்த போது தன்மீது யாரோ மண்எண்ணையை ஊற்றி தீவைத்ததாகவும், யார் அதனை செய்தது என்று தெரியவில்லை என்று வாக்குமூலம் அளித்தார். மேலும் தனக்கும் தனது மகன் மாரப்பனுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாகவும் தெரிவித்தார். 

இதையடுத்து மங்கலம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறியதால் போலீசார் மாரப்பனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

குமாரசாமிக்கு சொந்தமாக அப்பகுதியில் 4 சென்ட் நிலம் உள்ளது. அதனை மாரப்பன் தனது பெயருக்கு எழுதி தருமாறு குமாரசாமியிடம் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் குமாரசாமி மறுத்ததாக கூறப்படுகிறது. 

இதனால் தந்தை - மகன் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக மாரப்பன், குமாரசாமி மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.    
Tags:    

Similar News