உள்ளூர் செய்திகள்
அரியாங்குப்பத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் போலீசாரை தாக்கிய அண்ணன் தம்பி கைது செய்யப்பட்டனர்.
அரியாங்குப்பம் மணவெளி ரோட்டில் உள்ள ஒரு கோவில் விழாவையொட்டி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கண்டு களித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஒரு வாலிபர் மேடையில் ஏறி இசை நிகழ்ச்சி குழுவினருடன் சேர்ந்து நடனம் ஆடி ரகளை செய்தார்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அரியாங்குப்பம் போலீசார் அந்த வாலிபரை மேடையை விட்டு கீழே இறங்கும் படி அறிவுறுத்தினர். ஆனால் அந்த வாலிபர் அதனை ஏற்காமல் தொடர்ந்து மேடையில் நின்று கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரை போலீசார் மேடையில் இருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அந்த வாலிபர் போலிசாரை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
மேலும் அந்த வாலிபருக்கு ஆதரவாக மற்றொருவர் போலீஸ்காரர் முனியாண்டி என்பவரை கன்னத்தில் தாக்கினார்.
உடனே மற்ற போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். விசாரணையில் மேடையில் ரகளை செய்தவர் அரியாங்குப்பம் பழைய பூரணாங்குப்பம் வீதியை சேர்ந்த ஏசுவாஜான் (வயது 25) மற்றும் போலீஸ்காரரை தாக்கியவர் அவரது சகோதரர் ஜீசஸ் (வயது 28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணன்-தம்பி 2 பேரையும் கைது செய்தனர்.