செய்திகள்
அரிசி பறிமுதல்

மார்த்தாண்டம் அருகே டெம்போவில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2021-01-11 04:55 GMT   |   Update On 2021-01-11 04:55 GMT
மார்த்தாண்டம் அருகே டெம்போவில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
குழித்துறை:

விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி தினேஷ் சந்திரன், வருவாய் அலுவலர் மைக்கேல் சுந்தர்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ஐரேனிபுரம் பகுதியில் சென்ற போது, அந்த வழியாக ஒரு டெம்போ வேகமாக வந்தது. அதிகாரிகள் டெம்போவை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால் டிரைவர், டெம்போவை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார்.

இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் தங்களது வாகனத்தில் விரட்டி சென்றனர். இதனை கண்டதும், டெம்போவை சாலையோரம் நிறுத்தி விட்டு டிரைவர் உள்பட 2 பேர் தப்பியோடி விட்டனர். பின்னர், அதிகாரிகள் டெம்போவை சோதனை செய்த போது, அதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் டெம்போவுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து காப்புக்காடு குடோனில் நிறுத்தி வைத்தனர்.

அதிகாரிகளின் விசாரணையில், கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரியவந்தது. மேலும், டெம்போவை நிறுத்தி விட்டு தப்பிச் சென்ற டிரைவர் உள்பட 2 பேரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News