செய்திகள்
அறந்தாங்கி அருகே நாகுடியில் பெண் சாவில் மர்மம் இருப்பதாக கோரி உறவினர்கள் சாலை மறியல் செய்த காட்சி.

அறந்தாங்கி அருகே பெண் மர்ம மரணம்- விசாரணை நடத்த கோரி உறவினர்கள் சாலை மறியல்

Published On 2021-01-21 10:56 GMT   |   Update On 2021-01-21 10:56 GMT
அறந்தாங்கி அருகே பெண் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி:

அறந்தாங்கி அருகே நாகுடி களக்குடிதோப்பை சேர்ந்தவர் சேகர். சமையல் தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (வயது 26). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது நந்தினி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து அந்த பகுதியினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து நந்தினியின் உடல் கணவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின் அவரது உடலை அடக்கம் செய்ய நாகுடியில் உள்ள மயானத்துக்கு எடுத்து சென்றனர்.

அப்போது நந்தினியின் உறவினர்கள் எங்களிடம் சொல்லாமல் உடலை எப்படி மயானத்திற்க்கு கொண்டு செல்லலாம் என கோரி நந்தினி சாவில் மர்மம் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கூறி கட்டுமாவடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசீலன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து நந்தினியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Tags:    

Similar News