உள்ளூர் செய்திகள்
கனகராஜ்

அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி

Published On 2022-01-13 09:45 GMT   |   Update On 2022-01-13 09:45 GMT
திருப்பத்தூரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை தம்பி வெட்டிக்கொன்றார்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அடுத்த ஆவல்நாய்க்கன்பட்டி சோளச்சூர் பகுதியை சேர்ந்த அர்ஜுனன் மகன்கள் கோவிந்தராஜ் (வயது42), இவரது தம்பி கனகராஜ் (வயது40). இவர்கள் மரம் ஏறும் தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்து கனகராஜின் மனைவி பூங்கொடி (39) பூ கட்டிக் கொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் வந்த கோவிந்தராஜ் வழியிலேயே அமர்ந்து கொண்டிருந்த பூங்கொடியிடம் தன்னுடைய வீட்டிற்கு செல்ல வழிவிடுமாறு கேட்டார்.

இது சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. போதையில் இருந்த கோவிந்தராஜ் பூங்கொடியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. நடந்த சம்பவங்களை தன்னுடைய கணவர் கனகராஜிக்கு பூங்கொடி போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

உடனே வீட்டிற்கு வந்த கனகராஜ் இது குறித்து அண்ணன் கோவிந்தாஜிடம் கேட்டுள்ளார். இதனால் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த கனகராஜ் கத்தியால் அண்ணன் என்றும் பாராமல் கத்தியால் வெட்டினார். 

இதில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து துடிதுடித்து இறந்தார். கனகராஜும் மது போதையில இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் கந்திலி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் பேரில் விரைந்து வந்த கந்திலி போலீசார்  கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

குடிபோதையில் தம்பியே அண்ணனை சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News