செய்திகள்
கொலை

திருப்பூரில் பனியன் தொழிலாளி கல்லால் அடித்துக்கொலை

Published On 2019-11-08 09:17 GMT   |   Update On 2019-11-08 09:17 GMT
திருப்பூரில் பனியன் தொழிலாளி கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் கே.வி.ஆர். நகரை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் மருதுபாண்டி (வயது 33). இவர் அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். திருமணமாகவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு வெளியே சென்றார். வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. நண்பர்களுடன் சென்றிருக்கலாம் என்று பெற்றோர் நினைத்தனர்.

இன்று அதிகாலை அந்த பகுதியில் உள்ள மாநகர் நகர் நல மையம் ஆஸ்பத்திரி அருகே அந்த பகுதி மக்கள் சென்றபோது ஒரு வாலிபர் தலையில் கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத் தில் கோரமாக கிடந்தார்.

இந்த தகவல் மருது பாண்டியின் பெற்றோருக்கு தெரியவந்ததும் அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு கொலை செய்யப்பட்டு கிடப்பது தங்கள் மகன் தான் என்று கூறி கதறி அழுதனர்.

இது குறித்து திருப்பூர் மத்திய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை நடத்தினர். மோப்ப நாய் மருதுபாண்டி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

இது குறித்து போலீசார் அந்த பகுதி மக்களிடம் விசாரித்தபோது மருதுபாண்டி பெரும்பாலும் யாரிடமும் அதிகம் பேசமாட்டார். இரவு நேரங்களில் இந்த பகுதியில் பொழுதுபோக்குவார் என்று கூறினர். மருதுபாண்டியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மருதுபாண்டி கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News