செய்திகள்
விபத்தில் பலியான பிரகாஷ் மற்றும் மஞ்சுளா

கவுந்தப்பாடி அருகே விபத்து- புதுமண தம்பதி பலி

Published On 2019-08-31 05:54 GMT   |   Update On 2019-08-31 05:54 GMT
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே வேனும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் புதுமண தம்பதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கவுந்தப்பாடி:

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள நிச்சாம்பாளையம் பிரப்நகர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் பிரகாஷ் (வயது 28).

இவருக்கும் கவுந்தப்பாடி அருகே உள்ள ஆவாரங்காட்டூரை சேர்ந்த சதாசிவம் என்பவரது மகள் மஞ்சுளா (வயது 19) என்பவருக்கும் கடந்த 3 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

மஞ்சுளா ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இவரது கணவர் பிரகாஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கணவன்-மனைவி மற்றும் அவர்களது உறவினர் செம்பருத்தி என்ற பெண் என 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

கவுந்தப்பாடி அருகே சிறுவலூர் ரோட்டில் வேலாம்பாளையம் அருகே சென்ற போது எதிரே ஒரு ஈச்சர் வேன் வந்தது.

இதில் எதிர்பாராத விதமாக வேனும்-மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சிகிச்சை பலன் பெறாமல் கணவன்-மனைவியான பிரகாசும், மஞ்சுளாவும் பரிதாபமாக இறந்தனர்.

உறவினர் பெண்ணான செம்பருத்திக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் புதுமண தம்பதி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News