உள்ளூர் செய்திகள்
ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவிகள்.

ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு தொடங்கியது

Published On 2022-05-06 09:44 GMT   |   Update On 2022-05-06 09:44 GMT
ஈரோடு மாவட்டத்தில் இன்று 870 தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 28 ஆயிரத்து 365 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் இன்று 870 தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 28 ஆயிரத்து 365 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வை எழுதுகின்றனர். 

தமிழகத்தில் இன்று எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு தொடங்கியது. இன்று தொடங்கிய தேர்வு வருகிற 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக 113 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5 மையங்கள் தனித்தேர்வர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 870 தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 28 ஆயிரத்து 365 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வை எழுதுகின்றனர். மாணவர்கள் தேர்வை எந்த ஒரு சிரமமுமின்றி எழுதும் வகையில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. 

தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி செய்யப்பட்டு இருந்தன. மேலும் தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டு இருந்தது.

மாணவர்கள் தேர்வு அறைக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதன்படி இன்று காலை சீக்கிரமாகவே அந்தந்த தேர்வு நடக்கும் பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகள் வந்து விட்டனர்.

மாணவ-மாணவிகள் கோவிலுக்கு சென்று தேர்வை நல்லபடியாக எழுத வேண்டும் என்று சாமி கும்பிட்டனர். பின்னர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து சிறிது நேரம் படித்தனர். தேர்வு எழுதச் செல்லும் மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தேர்வு சரியாக காலை 10 மணிக்கு தொடங்கியது. மாணவர்களுக்கு வினாத்தாள் கொடுத்ததும் முதல் 15 நிமிடம் வினாத்தாள்களை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டது.  

அதைத்தொடர்ந்து 10.15 மணிக்கு தேர்வு தொடங்கியது. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வு எழுதினர். தேர்வு அறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வு அறைக்குள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு இருந்தது.

மேலும் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 118 முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் என மொத்தம் 203 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் தேர்வு மையங்களை தீவிரமாக கண்காணித்தனர்.
Tags:    

Similar News