வழிபாடு
கருட தரிசனம் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம். (உள்படம்:- வானில் வட்டமிட்ட கருடன்).

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கருட தரிசனம்

Published On 2021-12-16 05:29 GMT   |   Update On 2021-12-16 05:29 GMT
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழாவையொட்டி கருட தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரத நாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

5-ம் திருவிழாவான நேற்று அதிகாலையில் கருட தரிசன நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து ரிஷப வாகனத்தில் உமாமகேசுவரர், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மன், கருட வாகனத்தில் பெருமாள் ஆகியோர் வந்தனர்.

அப்போது அவர்களுடன் வேளிமலை முருகன், மருங்கூர் சுப்பிரமணிய சாமியும், விநாயகரும் இணைந்து கொண்டனர். பின்னர் அனைவரும் கோவிலை வலம் வந்தனர். பிறகு வீரமார்த்தாண்ட கோவில் முன் மேற்கு நோக்கி உமாமகேஸ்வரர், பெருமாள், அறம்வளர்த்த நாயகி அம்மன் ஆகிய 3 பேரும் நின்றனர்.

அப்போது அத்திரி முனிவரும், அனுசுயா தேவியும் வானத்தில் கருட வடிவில் வந்து தாணுமாலயசாமியை வணங்கினர். இந்த கருட தரிசன நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் பார்த்து வணங்கினர்.

விழாவில் வருகிற 19 -ந் தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சாமி தேர், அம்மன் தேர், விநாயகர் தேர் ஆகிய 3 தேர்கள் உலா வருகின்றன. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவர். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மேலாளர். ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், சுசீந்திரம் தெய்வீக இயல், இசை, நாடகச் சங்கம் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்துள்ளனர்.
Tags:    

Similar News