நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் - மாணவர் மோசடிக்கு தந்தை உடந்தை?
தேனி:
இந்தியாவில் மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்ட பிறகு மாணவர்கள் பல நெருக்கடிகளுக்கு ஆளாகினர். நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களின் முழுக்கை சட்டை வெட்டப்பட்டு அவர்கள் எந்த ஒரு உபகரணங்கள் எடுத்து செல்லக்கூடாது என கடுமையான சோதனை நடத்தப்பட்டது. மாணவிகளின் தலைமுடியை கூட அவிழ்த்து சோதனை நடத்தப்பட்டது. இதனால் மிகுந்த மன உளைச்சலுடன் மாணவ-மாணவிகள் நீட் தேர்வை எதிர்கொண்டனர்.
தேர்வு எழுதும் அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மாணவர்கள் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடாமல் சோதனை நடத்தி வந்தனர். இவ்வளவு கெடுபிடிகளுக்கு மத்தியில் மாணவர் ஆள் மாறாட்டம் செய்தது எப்படி நடந்தது? என பல மாணவர்களுக்கும் வியப்பாக உள்ளது.
இந்த ஆள் மாறாட்ட விவகாரத்தில் மாணவனின் தந்தைக்கும் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் அவர் டாக்டராக இருப்பதால் தனது மகனையும் டாக்டராக்க நினைத்து இதற்காக தவறான வழிமுறைகளை தேர்ந்தெடுத்தாரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இனி வரும் காலங்களில் மாணவரின் புகைப்படத்தோடு கைவிரல் ரேகையையும் பதித்து சோதனை நடத்தவும் தேர்வுத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.