செய்திகள்
நாகூர் அருகே சாராயம் கடத்திய 2 பேர் கைது
நாகூர் அருகே சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூர்:
நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி மறைவாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் சாராயம் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள், நாகூர் சாமந்தான்பேட்டையை சேர்ந்த தில்லையம்பலம் மகன் கந்தவேல் (வயது 30), திருச்சி கிழபடையார்ச்சி தெருவை சேர்ந்த துரைராஜ் மகன் சூசைராஜ் (36) என்பதும், இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சூசைராஜ், கந்தவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 லிட்டர் சாராயம் மற்றும் 10 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.