செய்திகள்
ஏரியூர் பஸ் நிலையம் ஜனவரி மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் - கலெக்டர் கார்த்திகா
ஏரியூர் பஸ் நிலையம் ஜனவரி மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கலெக்டர் கார்த்திகா தெரிவித்தார்.
தர்மபுரி:
ஏரியூர் ஒன்றியம் பெரும்பாலை, கெண்டேனஅள்ளி, ஏரியூர் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் ரூ.6.91 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் 6 வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கார்த்திகா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, உதவி கலெக்டர் தணிகாசலம், பென்னாகரம் தாசில்தார் சேதுலிங்கம், ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமரவேல், கலைச்செல்வி, உதவி பொறியாளர் துரைசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் கார்த்திகா கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய தமிழக அரசு சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்பகுதிகளுக்கும் சாலை வசதிகளை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு பகுதிகளில் ரூ.42.47 கோடி மதிப்பில் 18 தார்சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பெரும்பாலை ஊராட்சியில் ஆலமரத்தூர் முதல் ஆஞ்சநேயர் கோவில் வரையிலான சாலை பணி, கொம்பாடியூர் தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டுதல், கெண்டேனஅள்ளி ஊராட்சியில் பென்னாகரம்-மேச்சேரி சாலையில் கே.கே.புதூர் வரை தார்சாலை பணி, பாரத பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் பூச்சூர் முதல் வெள்ளம்மன் காடு வரை தார்சாலை அமைக்கும் பணி ஆகியவை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல் ஏரியூரில் பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் தற்போது வரை சுமார் 70 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி மாத இறுதிக்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணிகள் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.