செய்திகள்
மின்கட்டணம் செலுத்த காலக்கெடு நீட்டிப்பு-விசைத்தறியாளர்கள் வலியுறுத்தல்
மும்பை, டெல்லி போன்ற வடமாநிலங்களுக்கு உற்பத்தி செய்த துணிகளை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் திருப்பூர் விசைத்தறியாளர்கள் உள்ளனர்.
திருப்பூர்:
தமிழகத்தில் தற்போது பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் திருப்பூர், ஈரோடு, கரூர்,சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள விசைத்தறிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.இதனால் விசைத்தறியாளர்களுக்கு பொருளாதாரமும், தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் விசைத்தறிக் கூடங்களில் மின் கணக்கீடு செய்து வருகிற 15-ந்தேதிக்குள் கட்டணம் செலுத்த அரசு வலியுறுத்தியுள்ளது.கொரோனா தொற்று அதிகம் உள்ள மும்பை, டெல்லி போன்ற வடமாநிலங்களுக்கு உற்பத்தி செய்த துணிகளை விற்பனைக்கு அனுப்ப முடியாமல், விற்ற துணிகளுக்கு தொகை வந்து சேராத நிலையில் விசைத்தறிக்கூட உரிமையாளர்கள் உள்ளனர்.
இதனால் அவர்களால் மின் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. எனவே மின் கட்டணம் செலுத்துவதற்கு கால நீட்டிப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத்தலைவர் சுரேஷ், செயலாளர் வேலுசாமி, பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தமிழக மின்சாரதுறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.