செய்திகள்
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் - கடற்கரைக்கு செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர்
கன்னியாகுமரியில் நேற்று தடையை மீறி சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கடலில் இறங்காதவாறு போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கன்னியாகுமரி:
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்கள் காலையில் சூரிய உதயத்தை கண்டு களித்து, பகவதி அம்மனை வழிபட்டு, கடலில் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிடுவார்கள்.
தற்போது கொரோனா பரவல் காரணமாக சனி, ஞாயிறு ஆகிய தினங்கள் சுற்றுலா தலங்களுக்கும், கடற்கரைக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கன்னியாகுமரியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
அவர்கள் கடலில் இறங்காதவாறு போலீசார் கயிறு கட்டி தடுத்து நிறுத்தினர். மேலும், கடற்கரையில் அமைந்துள்ள காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் மணிமண்டபம் ஆகியவற்றுக்கும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரையிலுள்ள கடைகளில் பொருட்களை வாங்கிவிட்டு, தொலைவில் நின்று கடலை பார்த்து ரசித்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினர்.