செய்திகள்
நாராயணசாமி

காங்கிரசில் உள்ள எட்டப்பன்கள் சதியால் ஆட்சி கவிழ்ந்தது- நாராயணசாமி ஆவேசம்

Published On 2021-03-03 06:29 GMT   |   Update On 2021-03-03 06:29 GMT
காங்கிரசில் உள்ள எட்டப்பன்கள் சதியால் ஆட்சி கவிழ்ந்தது என்று புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:

புதுவை மகிளா காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், கியாஸ், டீசல் விலை உயர்வை கண்டித்து அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

புதுவைக்கு வந்த பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் 5 ஆண்டாக ஊழல் மலிந்து விட்டது. திட்டங்களை நிறைவேற்றவில்லை. பொய்யை தவிர வேறு எதையும் நாராயணசாமி கூறுவதில்லை. மத்திய அரசு திட்டங்களை நிறைவேற்றவில்லை என்று கூறி உள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பு எப்படி நடந்தது? என மக்களுக்கு தெரியும். 5 ஆண்டாக மத்திய அரசு புதுவையை புறக்கணித்தது. கிரண்பேடியை நியமித்து திட்டங்களை புறக்கணித்தனர். எதிர்க்கட்சிகள் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி செய்தனர். நம் கட்சியை சேர்ந்த எட்டப்பன்கள் சதியினால் ஆட்சி கவிழ்ந்தது.

இதற்காக கோடிக்கணக்கான ரூபாயை விமானத்தில் கொண்டு வந்து எம்.எல்.ஏ.க்களின் வீட்டில் பெட்டிகளை இறக்கி, சாக்கு மூட்டையில் பணத்தை கொடுத்து ஆட்சி மாற்றம் செய்ய வேலை செய்தனர். பல பேர் விலைக்கு போனார்கள். பலரை பொய் வழக்கு போடுவதாக மிரட்டி ஆட்சியை கவிழ்த்தனர்.

பா.ஜனதாவில் இருந்தவர்கள் மோடி வரும்போது மில்லை திறப்பார், கடன்களை தள்ளுபடி செய்வார் என கூறினார்கள். நாங்களும் மோடி இதனை செய்வார் என எதிர்பார்த்தோம். மோடி வாயால் வடை சுட்டுவிட்டு போய்விட்டார். 7 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை கொண்டு வந்தோம். அதற்கு மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.

4 ஆண்டு முன்பு கொண்டுவந்த ஜிப்மர் கிளைக்கு தற்போது அடிக்கல் நாட்டுகிறார். சாகர்மாலா திட்டம் 3 ஆண்டு முந்தைய திட்டம். புதுவைக்கு ரூ.4 ஆயிரம் கோடி கொடுத்தோம் என மோடி பொய் கூறியுள்ளார். நெடுஞ்சாலையில் 185 கி.மீ. தமிழகத்தில் உள்ளது. 26 கி.மீ.தான் புதுவையில் உள்ளது.

தமிழகத்தில் அடிக்கல் நாட்டாமல், புதுவையில் பல ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது போல், மக்களை ஏமாற்ற அடிக்கல் நாட்டியுள்ளார்.

மோடி பாதி பொய்யர், அமித்ஷா முழு பொய்யர். நரேந்திர மோடி ரூ.15 ஆயிரம் கோடி ரெயிலில் அனுப்பினாராம். அதில் பாதியை நான் எடுத்துவிட்டு சோனியாவுக்கும், ராகுலுக்கும் கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார். அரசு பணம் நாராயணசாமி கைக்கு வருமா? இவர்கள் பொய்யர்கள், புரட்டர்கள். 15 பைசா கூட புதுவை வளர்ச்சிக்கு தரவில்லை.

41 சதவீத மானியத்தை நிறுத்தி 26 சதவீதம்தான் அளித்தனர். இதுபோல் பல திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி தரவில்லை. நம் கட்சியை விட்டு சென்றவர்கள் எல்லாம் அரசியல் வியாபாரிகள் என மக்கள் பேசுகின்றனர். ரூ.15 ஆயிரம் கோடி கையாடல் செய்திருந்தால் ஆதாரத்தை சொல்லட்டும்.

இதை நிரூபிக்காவிட்டால் அமித்ஷா பதவி விலக தயாரா? நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன். இதற்கு பதில் வராவிட்டால் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அமித்ஷா மீது காரைக்கால் கோர்ட்டில் கிரிமினல் வழக்கு போடுவேன். இருப்பது ஒரு உயிர், அது புதுவை மக்களுக்காக போகட்டுமே.

புதுவையின் தனித்தன்மையை காக்க நாங்கள் தயாராக உள்ளோம். மோடி, அமித்ஷாவை நம்பி சென்றவர்கள் நடுரோட்டில் நிற்க போகிறார்கள். காங்கிரசுக்கு துரோகம் செய்தவர்கள் வாழ்க்கையில் மேலே வந்ததே கிடையாது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கியாஸ் விலை உயர்வை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இதனால் அனைத்து பொருட்களின் விலை உயரும். புதுவையை பொறுத்தவரை மதச்சார்பற்ற காங்கிரஸ்-தி.மு.க .கூட்டணி பக்கம்தான் மக்கள் இருப்பார்கள்.

பா.ஜனதாவை மக்கள் ஆதரித்தால் புதுவையை குட்டிச்சுவராக்கிவிடுவர். ஒன்று தமிழகத்தோடு இணைப்பார்கள். இல்லாவிட்டால் சட்டமன்றத்தை கலைத்து விடுவார்கள். கவர்னருக்கு ஒரு பெரிய மாளிகை உள்ளது. ஆனால், அங்கு கூட்டம் நடத்தாமல் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு கூட்டம் நடத்துகின்றனர்.

இப்பவே இப்படி, இனி மேல் இப்படி நடந்தால் புதுவையை கூறுபோட்டு விற்று விடுவார்கள். பா.ஜனதாவை ஓட ஓட விரட்ட வேண்டும். இல்லாவிட்டால் தலித், மீனவர்கள், வியாபாரிகள், கிறிஸ்தவர்கள், சிறுபான்மையினர் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும்.

கவர்னர் தமிழிசை பள்ளிகளை திறக்க உத்தரவிட்டுள்ளார். தேர்வுகள் நடத்துவோம் என கூறியுள்ளார். பல்கலைக்கழகத்திலேயே தேர்வுகளை ஆன்லைனில் வைக்கின்றனர். பெற்றோர்கள், மாணவர்களுக்கு பெரும் துரோகத்தை கவர்னர் இழைத்துள்ளார். கவர்னர் தனது உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

Tags:    

Similar News