செய்திகள்
கைது

கொழுந்தியாளை திருமணம் செய்து வைக்கக்கோரி மாமனார்-மாமியாரை தாக்கிய வாலிபர் கைது

Published On 2021-02-23 15:21 GMT   |   Update On 2021-02-23 15:21 GMT
கொழுந்தியாளை திருமணம் செய்துவைக்கக்கோரி மாமனார்-மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அவினாசி:

கோவை மாவட்டம் வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 55). இவரது மனைவி சம்பூர்ணம் (45). இவர்களது மகள் ராஜேஸ்வரியை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஊத்துக்குளி மேற்கு பள்ளபாளையத்தை சேர்ந்த பிரபுவுக்கு (35) திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு ஸ்ரீபரணி என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் ராஜேஸ்வரியின் தங்கையையும் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அடிக்கடி பிரபு தனது மாமியார், மாமனாரிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் பிரபு தனது மனைவி, மற்றும் குழந்தையை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் கருப்புசாமியும் அவரது மனைவி சம்பூர்ணமும் தனது மகள் ராஜேஸ்வரியை பிரபுவிடம் சமாதானம் பேசி அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.

இதற்காக பிரபுவை அவினாசி துலுக்கமுத்தூர் பிரிவு அருகே வருமாறு கூறியுள்ளனர். அதன்படி பிரபு துலுக்க முத்தூர் பிரிவுக்கு வந்துள்ளார். அதை தொடர்ந்து கருப்புசாமி, அவருடைய மனைவி சம்பூர்ணம் ஆகியோரும், ஸ்ரீ பரணியுடன் ராஜேஸ்வரியும் அங்கு வந்தனர்.

அப்போது பிரபு தனது மாமனார், மாமியாரிடம் “ உங்களது இளைய மகளை ஏன் எனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரபு இரும்பு கம்பியால் கருப்புசாமியையும், சம்பூர்ணத்தையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. 

இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சம்பூர்ணம் கொடுத்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News