செய்திகள்
ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்னுக்கு 15 சதவீதம் அபராதம்
நடுவர் முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்த டிம் பெய்னுக்கு ஐசிசி 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், தகுதி நீக்கத்திற்கான ஒரு புள்ளியையும் வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 244 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
55-வது ஒவரின்போது புஜாராவுக்கு எதிராக ஆஸ்திரேலியா டிஆர்எஸ் முறையை பயன்படுத்தியது. ஆனால் 3-வது நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். அப்போது டிம் பெய்ன் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
டிம் பெய்னின் செயல்பாடு, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவரின் முடிவுக்கு கருத்து வேறுபாட்டை காட்டுவது வீரர்களின் நன்னடத்தை விதியை மீறும் வகையில் உள்ளது என புகார் அளிக்கப்பட்டது.
அவர் மீதான புகாரை டிம் பெய்ன் ஒப்புக்கொண்டு தண்டனையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து 15 சதவீதம் அபராதம் விதிப்பதாகவும், போட்டியில் இருந்து தடை செய்வதற்கான ஒரு புள்ளியையும் போட்டி நடுவர் டேவிட் பூன் வழங்கினார். தவறை ஏற்றுக் கொண்டதால், அதற்கு மேல் விசாரணை தேவையில்லை என்று டேவிட் பூன் தெரிவித்தார்.